போகப்போறே... இந்தா இப்பவே எடுத்துக்கோ" என்றபடி கழுத்திலிருந்த சங்கிலி, வளையல்கள் எல்லாவற்றையும் கழட்டிப்போட்டாள்.
''என்னடீ இது ..?" என்று மாய்ந்துபோனாள் வெங்குலட்சுமி.
"நீ பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சியே... மாசா மாசம் குளிக்கிறியான்னு வேறே கேட்டுத் தொணப்பறையே. அந்த மனுஷன் ஆம்பிள்ளையே இல்லை. எனக்கு இந்த ஐன்மத்துலே குழந்தை பிறக்கவே பிறக்காது”
முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள் நர்மதா.
தெருவிளக்குகள் எரிய ஆரம்பித்தன. இனி நர்மதா சினிமாவுக்கு வரமாட்டாள் என்று நினைத்தபடி சாயிராம் கிளம்பினான்.
வெங்குலட்சுமி வாயடைத்துப்போய் உட்கார்ந்திருந்தாள்
கங்கம்மா எப்படி ஏமாற்றி விட்டாள் பார்த்தாயா? பணத்தையும், பவிஷையும் காட்டி!
இதைப்பற்றி யாரிடம்போய் விவாதம் பண்ணமுடியும்?
வெளியே சொல்லச் சொல்ல நர்மதாவுக்குத் தானே கெடுதலாக முடியும்?
இந்தப் பெண்ணை இனிமேல் இங்கே வைத்திருக்கக் கூடாது. இன்னும் கொஞ்சநாளில் சந்தி சிரிக்க அடித்து விடுவாள். இல்லை ஒரு முழம் கயிற்றில், பாழும் கிணற்றில், மூட்டைப் பூச்சி மருந்தில் தன்னை மாய்த்துக் கொள்வாள். அவளை அங்கேயே அனுப்பி விட வேண்டும்.
அம்மாவும் பொண்ணும் பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள்.
''என்னவோ நடந்துபோச்சு. அதுக்காக நம்ப கெட்டுப் போறதா என்ன? நான் கூட சின்ன வயசுலே வீணாப் போனவ தான்... அப்புறமா புருஷனைப் பத்தி நெனச்சிருப்பேனா''