"எங்கே போயிட்டு வரேள்?''
"உன் பூரணி அக்காவை ஊர்லே கொண்டுபோய் வீட்டுட்டு வரேன்"
"ஏன் உடம்பு சரியில்லையா?'
"அவ ரொம்ப மாறிப்போயிட்டா. எப்பப் பாத்தாலும் படுக்கைதான். கங்கம்மாவும் இந்த சமயத்திலே பொறந்தாத்துலே இருக்கட்டும்பா... அனுப்பேன்னு சிபாரிசு பண்ணவே அழைச்சுண்டு போனேன்.
வண்டியின் ஆட்டத்தில் இருவரும் நெருங்கவே ஆரம்பித்தார்கள். நர்மதாவின் மேலிருந்து லேசான மணம் கமழ்ந்தது. புடவைத் தலைப்பு அவன் மேல் உரசியது. இன்னொரு ஆளும் இருக்கிற இடத்தில் உட்கார வரவே, மூன்று பேர்கள் உட்காருகிற சீட் ஆனதால் பாலு மேலும் நெருங்கி உட்கார்ந்தான். அவள் உடம்பில் ஏற்படும் சிலிர்ப்பையும் உணர்ந்தான்.
இருவரும் இறங்கி ஏதோ ஓர் ஊரில் ஹோட்டலில் காப்பி சாப்பிட்டார்கள். அவள் பஸ்ஸில் ஏற அவன் கீழே நின்று அவளைப் பார்த்தபடி சிகரெட் பிடித்தான்.
மனசிலே ஏகப்பட்ட உளைச்சல். இப்படியே இரண்டு பேரும் எங்கேயாவது போய் விடலாமா? இந்த நிமிஷத்திலே நினைக்கிறதும், வாழ்கிறதும் தான் நிஜம். மற்றதெல்லாம் பொய். நர்மதாவும் புன்னகையுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
பஸ்ஸில் ஓட்டுநர் வந்து உட்கார்ந்ததும் பாலு உள்ளே வந்து அவள் பக்கத்தில் உட்கார்ந்தான்.
"ஊருக்குப் போய் ரொம்ப நாள் இல்லே போல இருக்கே? 'போர்' அடிச்சுதா? பட்டப்பாவை விட்டுட்டு இருக்க முடியலே இல்லே.."
அவன் ஆழம் பார்க்கிறான் என்பது இவளுக்குப் புரிந்தது.