நர்மதா பேசாமல் இருந்தாள். நாலு பெற்றவள் புருஷன் செத்துப் போன பிறகு புருஷனை நெனச்சுண்டு இருந்தேனா என்கிறாள்.
பட்டப்பா வந்தவுடன் உடனே கிளம்பிவிட வேண்டும் என்று நர்மதா நினைத்தாள். அவன் வெங்குலட்சுமியின் கண்களில் படுவதை இவள் விரும்பவில்லை. ஆகவே, அவன் வந்து விட்டுப் போன மறுநாளே நர்மதா 'நான் ஊருக்குப் போறேன்" என்று மொண்ணையாக அம்மாவிடம் சொன்னாள்.
"அங்கே தானே போறே?".
"பின்னே எங்கே போவேன்? எவனோடும் போயிட மாட்டேன். உனக்கு இருக்கிற நம்பிக்கையெல்லாம் எனகும் இருக்கு. நம்ப பெண்கள் நம்பற எல்லா தர்மங்களையும் நானும் நம்பறேன். இங்கே இருக்கப் பிடிக்கலை எனக்கு”
"சரி..."
பஸ் ஸ்டாண்ட் வரை வெங்குலட்சுமி வந்தாள். பிழியப் பிழிய அழுதாள். வழி நெடுக, "ஏமாந்துட்டேண்டி" என்று மன்னிப்பு கேட்பது போல பேசினாள். நர்மதாவுக்குப் பாவமாக இருந்தது. நினைவு தெரிந்த நாளாய் அம்மா யார் வீட்டிலோ அடுப்படியில் வெந்து கொண்டிருக்கிறாள். அவளை சுகமாக வைத்துக் கொள்ள வேண்டும். என்று அண்ணா நினைக்கவில்லை.
"நீ ஏனம்மா இந்த வயசிலே வேலைக்குப் போக வேண்டும்? பேசாம நான் போடற கஞ்சியோ கூழோ சாப்பிட்டுட்டுரேன்” என்று உரிமையாகப் பிள்ளை ஒருநாள் சொன்னதில்லை. அவனும், அவன் மனைவியும் சினிமாவுக்கு, டிராமாவுக்குப் போவதென்ன வருவதென்ன என்று இருந்தார்கள். மாசக் கடைசியில் அம்மாவிடமே சில்லறை கேட்பான் பிள்ளை.
நர்மதா வந்திருந்தநாட்களில் அவளிடம் ஐந்து பத்தென்று கேட்டுக் கொண்டேயிருந்தான்.
பஸ் கிளம்ப ஆரம்பித்தது.