சிலாக்கியமானவன்" என்று இறைமுடிமணியைப் புகழ்ந்தார் சர்மா.
அன்று கோர்ட்டில் பஜனை மடம் பத்மநாய ஐயர் முதலியவர்கள் தங்கள் வயதுக்கும் படிப்புக்கும் சாஸ்திர ஞானத்துக்கும் கொஞ்சங்கூடப் பொருத்தமில்லாமல் ஆபாசமாக இட்டுக் கட்டிப் புளுகிய புளுகு சர்மாவை மிகமிக மனவேதனைப் படச் செய்திருந்தது. தன் மேலுள்ள விரோதம் ஒன்றையே நினைத்துத் தங்களைச் சிறுமைப்படுத்திக் கொள்ளக் கூட அவர்கள் தயங்கவில்லை என்பதும் அவருக்குப் புரிந்தது. கோர்ட் வாசலிலிருந்து வீடு திரும்பக் காரில் புறப்பட்டார்கள் அவர்கள்.
"நுணலும் தன் வாயால் கெடும்னு வசனம் சொல்வாளே சர்மா! அதுபோல அவா நிர்ப்பந்தப்படுத்தி இங்கே கொண்டு வந்து நிறுத்தின சாட்சியங்களே அவாளை நன்னாக் காமிச்சுக் குடுத்துடுத்து" என்றார் வேணு மாமா. கமலி எதுவும் பேசாமல் காரில் மௌனமாக அமர்ந்திருந்தாள்.
"இதை எல்லாம் பார்த்துட்டு எங்க தேசத்தைப் பத்தியே தப்பா நினைச்சுக்காதேம்மா! உயர்ந்த விஷயங்களும் சாஸ்திரங்களும் தத்துவங்களும் தோன்றின அளவு உயர்ந்த மனிதர்கள் அதிகம் தோன்றாததுதான் எங்களோட குறை. படிக்கறதுக்கும் வாழறதுக்கும் சம்பந்தமில்லாமப் போனதுதான் இன்னிக்கு இந்த தேசத்தோட கோளாறு" என்று உருக்கமான குரலில் மன்னிப்புக் கேட்பதுபோல் கமலியைப் பார்த்துச் சொன்னார் சர்மா.
"அறியாமையால் மனிதர்களில் யாரோ சிலர் செய்யும் தவறுகளுக்குத் தேசம் எப்படிப் பொறுப்பாகும்? தேசத்தைப் பற்றித் தப்பாக நான் ஏன் நினைக்க வேண்டும்?" - கமலியே பதிலுக்கு அவரைக் கேட்டதிலிருந்து தேசத்தைப் பற்றி அவள் தவறாக எதுவும் நினைக்கவில்லை என்று தெரிந்தது.
*****
கோர்ட் வழக்கு என்று மற்றவர்கள் அலைந்து கொண்டிருந்த சமயத்தில் காமாட்சியம்மாளின் உடல் நிலை மேலும் மோசமாகி இருந்தது. குமாரும் பார்வதியும்தான் வீட்டில் அம்மாவைக் கவனித்தும் கொண்டிருந்தார்கள். ஒரு கோபத்துடனும் முரண்டுடனும் மற்றவர்களைத் தன்னருகே அண்டவிடாமல் வீம்பு பிடித்தாள் அவள். சர்மா தன்னைக் கலந்து கொள்ளாமலும்,