இப்படிப் பேச்சுக் கொடுத்து ஆழம் பார்க்கிறாளா, அல்லது சாதாரணமாகத் தனக்குத் தெரிந்திருப்பதைத் தெரிவிக்கிறாளா என்று காமாட்சியம்மாளால் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது அப்போது. பெரியம்மா அதற்குள் தன் பழைய கேள்வியையே இரண்டாம் முறையாகத் திரும்பவும் கேட்டுவிட்டாள்.
"என்னடீ! பதிலே சொல்ல மாட்டேங்கறே? அந்த வெள்ளைக்காரி இங்கே இருக்காளோ? ஊருக்குத் திரும்பிப் போயாச்சோ? உன்னைத் தாண்டீ கேழ்க்கறேன்..."
"இன்னம் போகல்லே பெரியம்மா! வடக்குத் தெருவிலே வேணு மாமா ஆத்திலே போய்த் தங்கியிருக்கா. அந்த மாமாவோட பொண் வசந்திக்கும் இவளுக்கும் ரொம்ப சிநேகிதம்! பம்பாயிலேருந்து அவளும் பொறப்பட்டு வந்திருக்கா. எங்கேயாவது போகட்டும். இப்போ இங்கே தொல்லையில்லாம நிம்மதியாயிருக்கு" - இந்த உரையாடல் இதற்கு மேல் நீளாமல் கவனித்துக் கொள்ளவே காமாட்சியம்மாள் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. ஆனால் தொடர்ந்து பெரியம்மாவை அவளால் அப்படித் தவிர்த்துவிட முடியவில்லை.
இரண்டு நாள் கழித்துப் பக்கத்து வீட்டு முத்து மீனாட்சிப் பாட்டி, "ஏண்டி காமு! நீ எங்கிட்ட ஒரு வார்த்தை கூடச் சொல்லலியேடீ? கோர்ட்டிலே கேஸு நடக்கறதாமே! ஊரெல்லாம் பேசிக்கிறாளே? உங்காத்துக்காரர் சாட்சி சொன்னாராம். உன் பிள்ளை சாட்சி சொன்னானாம்" - என்று பெரியம்மாவையும் வைத்துக் கொண்டு பேச்சை ஆரம்பித்தபோது தவிர்க்க முடியாமல் கமலியைப் பற்றிய பேச்சு வந்து விட்டது. காமாட்சியம்மாளே பாட்டியிடம் அதுபற்றி விசாரித்தாள்: "அது என்ன கேஸ் பாட்டீ! எனக்கொண்ணுமே தெரியாது. இப்போ இந்தாத்திலே இதெல்லாம் யாரும் எங்காதிலே போடறதும் இல்லே..."
"என்னமோ அந்த வெள்ளைக்காரப் பொண்ணு நம்ம கோவில்லே எல்லாம் நுழைஞ்சதாலே கோவிலோட சாந்நித்யம் கெட்டுப் போச்சு, மறுபடி கும்பாபிஷேகம் பண்ணியாகணும்னு ஊர்க்காரா பணம் கேட்டுக் கேஸ் போட்டிருக்காளாமே? அது செருப்புக் காலோட கோவிலுக்குள்ளே நுழைஞ்சுதாமே?"
"மத்தது எல்லாம் எப்பிடியோ எனக்குத் தெரியாது பாட்டீ? ஆனாக் கமலி செருப்புக் காலோட கோவில்லே நுழைஞ்சாங்கறதை நான் நம்பலே. இந்தாத்திலே அந்தப் பொண் தங்கியிருந்தப்போ நான் கவனிச்சவரை சுத்தம் ஆசார அநுஷ்டானத்திலே அவமேலே