"உன் பிள்ளை ரவிக்குத்தான் புத்தி இப்பிடிப் போச்சுன்னா சகல் சாஸ்திரமும் வேதமும் படிச்ச உங்காத்துக்காரருக்கு ஏண்டீ இப்பிடிப் புத்தி போச்சு?"
"... விட்டுத் தள்ளுங்கோ... இனிமே அதைப் பத்தி நாம பேசிப் பிரயோஜனமில்லே பெரியம்மா, நாம் சொல்லி இங்கே யாரும் கேக்கறவா இல்லே..."
இதைச் சொல்லும்போது காமாட்சியம்மாளுக்குத் தொண்டை கமறியது, குரல் கரகரத்து நைந்தது. உணர்வும் சொற்களும் கலந்து குமுறின. கண்களில் ஈரம் பளபளத்தது.
"வியாகரண சிரோமணி குப்புசாமி சர்மாவோட வம்சத்திலே இப்பிடி ஒண்ணு நடக்கணும்னு தலையிலே எழுதி இருக்கு... கிரகசாரம் தான்... போ..."
-காமாட்சியம்மாள் தன் முகம் பெரியம்மாவுக்கும் முத்து மீனாட்சிப் பாட்டிக்கும் நேரே தெரியாதபடி படுக்கையில் மறுபுறம் ஒருக்களித்தாற் போலத் திரும்பிப் படுத்துக் கொண்டாள். அவள் கண்களில் நீர் வழிந்தோடியது. ரவியின் கலியாணத்தைப் பற்றி அவள் வருடக்கணக்காகக் கட்டி வைத்திருந்த கோட்டைகள் தகர்ந்த வேதனையில் மெல்ல அழத் தொடங்கியிருந்தாள் அவள்.
"கஞ்சி சாப்பிடறயாடீ? வெறும் வயத்தோட எத்தனை நாழிதான் இருப்பே?"
"வேண்டாம் பெரியம்மா! பசியே தோணலை. மந்தமா இருக்கு! சித்தே நாழி கண் மூடறேன். ரொம்ப அசதியா இருக்கு."
அவர்களோடு சம்பாஷணையைத் தவிர்க்க விரும்பிக் காமாட்சியம்மாள் பொய்யாகக் கற்பித்துக் கொண்ட தூக்கம் அது.
*****
நாளைக் காலையில் கேஸ் தீர்ப்பு என்றால் முதல் நாள் முழுவதும் சர்மாவும், வேணு