"அதெல்லாம் நடக்காதுப்பா... ஜெயிலுக்கெல்லாம் நீ போகமாட்டே. கலியாணத்துக்குக் கட்டாயம் வந்துடு தேசிகாமணீ!" என்று வற்புறுத்திச் சொல்லிவிட்டு வந்தார் சர்மா. மறுநாள் விடிந்தது. சப்கோர்ட்டில் கேஸ் நடந்தபோது கூடியிருந்ததைவிட அதிகக் கூட்டம் தீர்ப்பைக் கேட்கக் கூடி விட்டது. அன்று கமலி, சர்மா ஆகியோரின் மேல் உள்ளூர் ஆஸ்திகர்கள் போட்டிருந்த வழக்கின் மேல் தீர்ப்புக் கூறப்பட இருந்தது. கமலி வசந்தி, ரவி, சர்மா, வேணு மாமா, இறைமுடிமணி எல்லோருமே நீதி மன்றத்துக்கு வந்திருந்தார்கள். சீமாவையர் முதலிய பிரமுகர்களும் வந்திருந்தார்கள். பத்திரிகை நிருபர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்ததற்குக் காரணம் ஏற்கெனவே எல்லாப் பத்திரிகைகளும் இந்த வழக்கைப் பற்றிய செய்திகளை முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்திருந்ததுதான். தீர்ப்பை மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இது பற்றி எங்கும் பரபரப்பான பேச்சு இருந்தது.
நீதிபதி தமது இருக்கையில் வந்து அமர்ந்ததும் கோர்ட் அமைதியடைந்து நிசப்தமாகியது. நிறையப் பக்கங்களில் எழுதப்பட்டிருந்த அந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி படிக்கத் தொடங்கினார். முதற் சில பக்கங்களைப் படித்து முடிக்கும்வரை அதிலிருந்து யாரும் வழக்கின் முடிவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்து மதத்தின் நிலைகள் பழக்க வழக்கங்கள், அதில் மத மாற்றத்துக்கான சாஸ்திர பூர்வமான - அதிகார பூர்வமான ஒரு சடங்கு என எதுவும் இல்லாமலிருப்பது ஆகியவை பற்றி முதலில் விரிவாக விவரிக்கப்பட்டிருந்தது. நீதிபதி தொடர்ந்து தம்முடைய தீர்ப்பைப் படித்துக் கொண்டிருந்தார்.
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
----------
தொடரும்...
Go to Thulasi maadam story main page
h