"இப்போ இதை ஏன் விசாரிக்கிறேன் தெரியுமோடீ காமு? ஒரு சமாசாரம் கேழ்வைப் பட்டேண்டீ! நம்மூர் மனுஷா கொஞ்சப்பேர் பெரியவாளைப் பார்க்கப் புறப்பட்டுப் போயிருந்தா, அவா திரும்ப ஊருக்கு வந்து சொன்னா: அந்த வெள்ளைக்காரியும் உன் புள்ளையுமாப் பெரியவாளைப் பார்க்க அங்கே வந்திருந்துதுகளாம். அந்த வெள்ளைக்காரி ஸௌந்தரிய லஹரி, கனகதாரா ஸ்தோத்திரம், பஜகோவிந்தம்லாம் பெரியவா மின்னாடி ஸ்பஷ்டமா பாடினதோட மட்டுமில்லாமே அவா பாஷையிலேயும் மொழி பெயர்த்துச் சொன்னாளாம். பெரியவா ரொம்பச் சந்தோஷமாக் கேட்டுண்டிருந்தாளாம். அவர் மௌனம்கறதாலே ஒண்ணுமே பேசலையாம். ஆனா ரொம்பப் பிரியமாக் கேட்டதோட மட்டுமில்லாமத் திருப்தியோட இவாளை ஆசீர்வாதம் பண்ணி அனுப்பிச்சார்னு அதைப் பார்த்துட்டு வந்து ஊர்லே மனுஷா ஒரேயடியாக் கொண்டாடறா. ஊர் முழுக்க இதே பேச்சுத்தாண்டி. நேக்கே ஆச்சரியமாப் போச்சு, நம்பறதுக்கும் முடியலே. நம்பாமே இருக்கறத்துக்கும் முடியலே. ஒரு விசேஷமில்லாதவாளை அவா அப்பிடிப் பிரியமா உட்கார வச்சுண்டு பேசறதும் வழக்கமில்லே. ரெண்டு வருஷத்துக்கு மின்னாடி இந்தூர்ச் சீமாவையர் மடத்துச் சொத்தைக் கையாடிப்பிட்டுப் பெரியவாளைப் பார்த்துத் "தாராள மனசோட க்ஷமிக்கணும்னு" போய் நின்னப்போ அவர் மௌனமாயில்லாமே இருந்தும் கூட ஒரு வார்த்தை கூடப் பேசாமல் "போயிடு!"ன்னு கையை மட்டும் மறிச்சு அசைச்சுப் போகச் சொல்லிட்டாராம். அப்பேர்க்கொத்தவர் இவாகிட்ட இப்படி பிரியமா இருந்தார்னா அதுலே என்னமோ விசேஷம் இருக்கணும்டீ காமு..."
"எங்கிட்டயும் வந்து சொன்னா... ஆனா நான் அதை நம்பலே பெரியம்மா! வேற யாரும் சொல்லலே... இந்தப் பிராமணரே தான் சொன்னார். என் மனசை மாத்தறதுக்காகக் கதை கட்டி அளந்து விடறார்னுதான் நெனைச்சேன். 'மடத்து மானேஜரே லெட்டர் போட்டிருக்கார்... படிச்சுக்காட்டறேன்... கேளு'ன்னார், அதையும் நான் கேட்கல்லே."
"பொய்யாயிருக்காதுடீ! நடந்திருக்கும்னு தான் தோண்றது. நம்மூர் மனுஷா அத்தனை பேர் வந்து வாய் ஓயாமக் கொண்டாடறாளே?... பொய்யாயிருந்தா அப்பிடிக் கொண்டாடுவாளோடீ?"
காமாட்சியம்மாள் மௌனத்தில் ஆழ்ந்தாள். மேற்கொண்டு பெரியம்மாளிடம் என்ன பேசுவதென்றே அவளுக்குத் தெரியவில்லை. கமலிக்கும் ரவிக்கும் கலியாணம் ஏற்பாடாகியிருப்பது முதல் சகலத்தையும் தெரிந்து கொண்டுதான் பெரியம்மா தன்னிடம்