(Reading time: 17 - 33 minutes)
Thulasi maadam - Naa.Parthasarathy
Thulasi maadam - Naa.Parthasarathy

அப்பழுக்குச் சொல்ல முடியாது பாட்டீ! நம்ம மனுஷா இல்லே, நம்ம தேசம் இல்லே, நம்ம நிறம் இல்லேங்கறதைத் தவிர மரியாதை அடக்க ஒடுக்கம் - பணிவு, பவ்யம் இதிலெல்லாம் குத்தம் சொல்ல முடியாது."

   

இதைக் கேட்டு முத்துமீனாட்சிப் பாட்டியே தன் செவிகளை நம்ப முடியாமல் பேசுவது காமாட்சியம்மாள் தானா என வியந்து சந்தேகத்தோடு அவள் முகத்தைப் பார்த்தாள்.

   

"ஏன் பாட்டி அப்பிடிக் கண்ணை இடுக்கிண்டு என்னை என்னமோ மாதிரி பார்க்கறேள்? நான் இப்படிப் பேசறேன்னு சந்தேகப்படறேளா? நமக்கு வேண்டாதவங்கறதுக்காக ஒத்தரைப் பத்தி அபாண்டமாப் பொய்யும் புளுகும் பேசிடறது சரியில்லே. கமலி மேலே நேக்கிருக்கிற மனஸ்தாபம் வேறே. அவளும் ரவியும் போயிருக்கச்சே பெரியவா அவ ஸ்லோகம் சொல்லிக் கேட்டுத் திருப்தியா கேள்விப்பட்டுட்டு இங்கே வந்து சொல்றா. அதை நாம கொறை சொல்லலாமோ? ஒருத்தரை நமக்குப் பிடிக்கல்லேன்னா இல்லாததையும் பொல்லாததையும் எல்லாம் சொல்லிக் கோர்ட்டிலே போட்டு மானத்தை வாங்கறது இந்தூர்க்காராளுக்கு ஒரு வழக்கமாப் போச்சு-"

   

"கோர்ட்டிலே அந்த வடக்குத் தெரு வேணு கோபாலன் தான் கமலிக்கும் உங்காத்துக்காரருக்கும் வக்கீலாம். 'கமலி பத்தரைமாத்துத் தங்கம். சாட்சாத் சரஸ்வதியோட அவதாரம்னு' வேணுகோபாலன் வீட்டிலே போய்ப் பேசிப்பிட்டு வஸ்திரதானம் வாங்கிண்டு கோர்ட்டிலே போய், 'அவ கோவில் ஆசாரத்தையே கெடுத்துட்டா'ள்னு நேர் மாறாகச் சாட்சி சொன்னாராம் கைலாசநாதக் குருக்கள். அவர் தன்னாத்திலே வந்து சொன்னதை இரகசியமா டேப் ரெக்கார்டுலே பதிவு பண்ணி வச்சுண்டிருந்து கோர்ட்டிலே ஜட்ஜுக்குப் போட்டுக் காமிச்சிப் பொய்ச்சாட்சி'ன்னு வாதாடி குருக்களோட மானத்தை வாங்கிப்பிட்டாராம் அந்த வேணுகோபாலன்."

   

"பின்னே என்ன பாட்டீ? அத்தனை வயசானவர், கோவில்லே சுவாமியைத் தொட்டுப் பூஜை புனஸ்காரம்லாம் பண்றவர், வாய் கூசாமக் கூண்டிலே ஏறிச் சத்தியம் பண்ணிட்டுப் பொய் சொல்லலாமோ?"

   

"பொய் சொன்னதோட மட்டுமில்லாமே கமலியும் ரவியும் கோவில்லேயே என்னமோ அசிங்கமா நடந்துண்டான்னு வேற கதை கட்டி விட்டாளாம்டீ காமு!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.