"கேஸ் எப்பிடி ஆகும்னு ஊர்ல பேசிக்கிறா பாட்டி?"
"உனக்கெதுக்குடி அம்மா இப்போ அந்தக் கவலை? ஏற்கெனவே அரை உடம்பாப் போயிட்டே, கிழிச்சுப் போட்ட நாராப் படுத்த படுக்கையா இருக்கே. இந்தக் கவலை வேற எதுக்கு? நோக்கு இருக்கற கவலை போறாதோடீ?"
"கவலையில்லே... தெரிஞ்சுக்கலாமேன்னுதான் கேக்கறேன்."-
"வேணுகோபாலனும் உங்காத்துக்காரரும் கேஸைப் பத்தியே கவலைப்படாமே தங்களுக்கு ஜெயிச்சுடும்கற நம்பிக்கையோட கலியாண காரியங்களைக் கவனிச்சுண்டிருக்காளாம். இன்னிக்குக் கூட வேணுகோபாலனாத்துலே சுமங்கலிப் பொண்டுகள் பிரார்த்தனையாம். அவரோட சொந்தப் பொண்ணோட கலியாணத்துக்கு முந்தி எப்பிடி சுமங்கலிப் பொண்கள் பிரார்த்தனை பண்ணறதுண்டோ அப்பிடியே இந்த வெள்ளைக்காரி கலியாணத்துக்கும் கூடப் பண்ணியாறதாம்..."
இந்த உரையாடலை இதுவரை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த காமாட்சியம்மாளின் பெரியம்மா இப்போது மெல்லக் குறுக்கிட்டாள்:
"என்னடீ காமு! பாட்டி ஏதோ கலியாணம்கறாளே? என்னதுடீ?"
முதலில் காமாட்சியம்மாள் சிறிது தயங்கினாள். அப்புறம் எதையும் மறைப்பதைவிட உண்மை பேசுவது நல்லதென்று, பெரியம்மாவிடம் எல்லா விவரமும் சொல்லித் தன் மனஸ்தாபத்தையும் கூறிவிட்டாள். இந்தக் கலியாண ஏற்பாடு காரணமாகவே தனக்கும் தன் கணவருக்கும் பேச்சு வார்த்தை இல்லாமற் போய்விட்டது என்றும் கூறினாள் காமாட்சியம்மாள்.
"கலி முத்திப் போச்சு! அதுனாலேதான் இப்பிடி எல்லாம் நடக்கறது டீ" - என்றாள் பெரியம்மா.
காமாட்சியம்மாள் அதற்குப் பதில் எதுவும் சொல்லவில்லை.