தாயின் கடுகடுப்பையும், தமக்கையின் நிஷ்டூரத்தை யும் பொருட்படுத்தாமல் சங்கரன் ஓடிப் போய் டாக்டரை அழைத்து வந்தான். பானுவுக்கு 'டிப்தீரியா' வியாதி என்றும், உடனே சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் டாக்டர் கூறிவிட்டு, இஞ்செக்ஷன் கொடுத்துச் சென்றார்.
"நாளை சாயங்காலம் சம்பந்தி வீட்டார் கல்யாணம் சொல்ல வரப் போகிறார்கள், இங்கே இவ்வளவு அமர்க்களப் படுகிறதே?" என்று அலுத்துக் கொண்டாள் ருக்மிணி.
'என்றைக்குத் தான் நேரே இருந்தது எல்லாம். வயிற்றிலே இருக்கும் போதே அப்பனைக் கண் காணாத இடத்துக்கு ஓட்டி விட்டது. சித்தப்பன் கல்யாணத்துக்கும் தடங்கலாக இருக்கிறது இப்போ” என்று மீனாட்சி அம்மாள் பட படவென்று ஆத்திரத்துடன் பொரிந்து தள்ளினாள். "வருகிற வியாதியாவது சாதாரணமாக வருகிறதா? நூறு நூறாய்ச் செலவழிக்கும்படியல்லவா இருக்கிறது?" என்று ருக்மிணி அலுத்துக் கொண்டாள். அவளைவிட சம்பகத் துக்கும், பானுவுக்கும் அந்த வீட்டில் உரிமை அதிகம் உண்டு என்பதை அவள் மறந்தே விட்டாள்.
உணர்ச்சி மேலீட்டால் சர்மா பேசும் சக்தியை இழந்து, தம் அறையில் சாய்வு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து விட்டார். பிள்ளையால் அனாதையாக விடப்பட்ட குழந்தையைத் தான் கூட மனைவிக்குப் பயந்து அதிகமாகக் கவனிக்காமல் இருந்து விட்டோமே என்று அவர் மனச்சாட்சி அவரைக் குத்திக்கொண்டேயிருந்தது.
சம்பகம் துக்கம் ஒரு எல்லையை மீறிப் போகும்போது ஏற்படும் ஒரு வித தைரியத்தை அடைந்திருந்தாள். குழந்தைக்கு டாக்டர் கூறியபடி ஆகாரம் கொடுத்தும், கண் இமைக்காமல் அவள் அருகில் உட்கார்ந்தும் சிகிச்சை செய்தாள். கொடிய தொத்து வியாதி ஆதலால், அதைச் சாக்காக வைத்துக் கொண்டு பானு இருந்த அறைப் பக்கம் யாருமே வருவதில்லை..
"குழந்தையிலே நானும், அவனும் ஒன்றாக விளையாடு வோம். எடுத்ததற்கெல்லாம் அவன் என்னுடன் சண்டை பிடிப்பான்" என்று நாலு பேர் முன்னிலையில் பானுவின் தகப்பானரைப் பற்றி ருக்மிணி பெருமையாகப் பேசுவாள். அவள் அன்று உடன் பிறந்தானின் குழந்தை சாகக் கிடக் கிறதே என்றும் பார்க்கவில்லை. பானு இருக்கும் அறைப் பக்கம் பார்த்தால் கூட வியாதி ஒட்டிக் கொள்ளும் என்கிற நோக்கத்துடன் நடந்து கொண்டாள் அவள்.