அவன் எழுதியிருக்கிற விஷயத்துக்கு உங்கள் சம்மதத்தை எழுதுங்கள். அவ்வளவு தான்!" என்றாள் விசாலாட்சி.
ராமபத்திர அய்யர் ஒரு வரட்டுச் சிரிப்புச் சிரித்தார். மனைவியின் அறியாமையைக் கண்டு அவர் அப்படித்தான் சிரிப்பது வழக்கம்.
"அவன்தான் என்னவோ தெரியாமல் உளறுகிறான் என்றால் நீயுமா அதையே சொல்லிக் கொண்டிருப்பாய்?” என்றார் கோபத்துடன்.
"அவன் உளறுகிறான்! நீங்கள் 'பெப்பே' என்கிறீர்கள்! அவ்வளவுதான் வித்தியாசம். அந்தப் பிள்ளை என்னவோ சொல்லிவிட்டுப் போய் இருக்கிறான் என்றுமலைக்கிறீர்கள். என்னையும் பைத்தியக்காரியாக நினைத்துக் கொண்டிருக் கிறீர்கள். நமக்கும் அவர்களுக்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள சம்பந்தம்தான் உண்டு!"-விசாலாட்சி வருத்தம் தொனிக்கக் கூறினாள்.
சங்கரன் வார்த்தை தவறுபவனா? தன்னிடமும், காமு விடமும் பரிதாபம் கொண்டு கூறிய வார்த்தைகளா அவைகள்? ராமபத்திர அய்யர் கொஞ்சநேர சிந்தனையில் மூழ்கி இருந்தார்.
கடவுளின் செயல் இருந்தால் எதுவும் நடக்கக் கூடும் என்று சிறிது நேரத்துக்கு முன்பு உறுதியான தீர்மானத்துடன் இருந்தவரின் உள்ளமும் கலங்கியது. மாதம் நாலாயிரம் சம்பாதிக்கும் சர்மாவின் அந்தஸ்து எங்கே. நாற்பது ரூபாய் சம்பாதிக்கும் ராமபத்திர அய்யருடைய நிலைமை எங்கே? அதற்காகப் பெற்று வளர்த்த பெண்ணைக் கிணற்றில் தள்ளுவது போல் மூன்றாந்தாரமாகவா விவாகம் செய்து தருவது? இது எவ்வளவு பாதகமான செயல்?
பலதரப்பட்ட கேள்விகள் ராமபத்திரய்யரின் மனத்தைக் குழப்பி, அவர் தலையைக் கிறுக்க வைத்தன.
"அம்மா காமு! நான் கொஞ்சம் கழனி வரைக்கும் போய்விட்டு வருகிறேன்" என்று கூறிவிட்டு, மனைவி கேட்ட கேள்விக்குப் பதில் ஒன்றும் கூறாமல் கொல்லைப் பக்கமாகக் கழனி வெளியை நோக்கிப் போனார், ராமபத்திர அய்யர்.