கண்களில் நீர் நிறைந்திருந்தது. பணிவுடன் தலையை அசைத்தாள்.
"உன் வீட்டில் எல்லோரையும் விசாரித்ததாகச் சொல் அப்பா' என்று விசாலாட்சி விடை கொடுத்தாள்.
"சங்கரா! முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவது போலவும், எட்டாத பழத்துக்குக் கொட்டாவி விடுவது போலவும் இருக்கிறது என் ஆசை, ஆசை வித்தை நீ ஊன்றி விட்டாய், சற்றும் நாங்கள் எதிர்பாராத விஷயத்தை நீ கூறியிருக்கிறாய். பெற்றோர்கள் மனத்தைக் கெடுக்கும் வேண்டாம். படியாக எந்தக் காரியத்தையும் நீ செய்ய யோசித்துத் தகவல் எழுது” என்று ராமபத்திரய்யர் கூறி வழி அனுப்பினார் சங்கரனை,
சங்கரனின் புன்முறுவல் தவழும் முகம் எதையும் ஒரு சிரிப்புடன் ஏற்றுக் கொண்டது.
வண்டி மாடுகளின் சதங்கை ஒலி 'ஜல் ஜல்' என்று சப்திக்க, வண்டி தெருக்கோடி திரும்பி ரயிலடியை நோக்கி விரைந்தது. காமுவின் எழில் வதனம் அழியாத சித்திரமாக சங்கரன் மனத்துள் பதிந்து இருந்தது. "எல்லோரும் எவ்வளவோ நகைகளை அணிந்து கொள்ளுகிறார்களே, காமுவுக்கு அந்தக் கருகமணி மாலை ஒன்றே எவ்வளவு சோபையைக் கொடுக்கிறது?" என்று எண்ணிப் பூரித்துப் போனான் அவன்.
"எல்லோரும் விலை உயர்ந்த உடுப்புகளாக உடுத்திக் கொள்கிறார்களே,சாதாரண கதர் வேஷ்டியும், சட்டை யுமே அவருக்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது?' என்று வீட்டில் காமரா அறையில் உட்கார்ந்திருந்த காமு நினைத்துக் கொண்டாள். ரயிலில் பிரயாணம் செய்யும் சங்கரனின் மனமும், பொன்மணி கிராமத்தில் வீட்டில் காமரா அறையில் நூல் சவுக்கம் பின்னும் காமுவின் மனமும் ஒரே சிந்தனையில் மூழ்கி இருந்தன.
சங்கரன் ஊருக்குப் போன பிறகு அங்கே நிலவி இருந்த நிசப்தத்தைக் கலைத்துக் கொண்டு, 'முத்தையாவுக்கு என்ன பதில் எழுதப் போகிறீர்கள்?" என்று கேட்டாள் விசாலாட்சி.
"என்னத்தை எழுதுகிறது அவனுக்கு!" என்று பதில் கூறினார் ராமபத்திர அய்யர் அலட்சியமாக.
"என்ன எழுதுகிறதாவது? பச்சைக் குழந்தையா என்ன நீங்கள், நான் எழுதச் சொல்லித் தர?