போய் விட்டால் கோபித்துக்கொள்ளப் போகிறீர்களே என்று பெட்டி, படுக்கையுடன் வந்து விட்டேன்” என்றான் சங்கரன் புன்சிரிப்புடன்.
அவனுடைய சரளமான சுபாவம் ராமபத்திரய்யருக்கு மேலும் அவனிடம் உள்ள மதிப்பை அதிகரிக்கச் செய்தது.
"விற்றது எல்லாம் போக ஏதோ கொஞ்சம் நிலம் இருக்கிறது. அதையும் விற்று விட்டால் காமுவின் கல்யாணத்தை நடத்தி விடலாம் என்று உத்தேசித்துத் தான் ராஜம்பேட்டை வரைக்கும் ஒருவரைப் பார்க்கப் போயிருந்தேன்” என்றார் ராமபத்திரய்யர்.
"இந்தக் காலத்தில் இருக்கிறதையும் விற்று விட்டால் பிறகு குடும்பம் நடத்துவதே கஷ்டமாகப் போய்விடுமே மாமா? அப்பாவைக் கலந்து யோசனை செய்து நான் விவரமாகத் தெரிவிக்கிறேன். அவசரப்பட்டு விடாதீர்கள்!” என்று எச்சரிக்கை செய்யும் தொனியில் கூறினான் சங்கரன்.
காமு சமையலறையிலிருந்து இரண்டு டம்ளர்களில் காபியைக் கொண்டு வந்து வைத்தாள். இருவர் மனத்திலும் எழும் ஆயிரமாயிரம் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு, ஒன்றும் தெரியாத பச்சிளங் குழந்தைகள் போல் இருந்தனர் சங்கரனும், காமுவும்.
சங்கரன் கூறிய வார்த்தைகள் நிஜமாக நடக்கக் கூடியவையா? உயர்ந்த பதவியில் இருப்பவரும், செல்வத் தில் திளைத்திருப்பவருமான நடேச சர்மா, 'பரம ஏழையான தன் மகளைச் சங்கரனுக்கு விவாகம் செய்து கொள்ளத் துணிவாரா?''
நடக்க முடியாத விஷயங்கள் சில சமயங்களில் நடந்தே விடுகின்றன. 'ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்றாகும்' என்கிற பாடல் ராமபத்திரய்யருக்கு. நினைவு வந்தது "எனையாளும் ஈசன் செயல்!" இருந்தால் எதுதான் உலகில் சாத்தியமில்லை என்று நினைத்தார் அவர்.
சங்கரன் ஊருக்குப் புறப்படு முன்பு காமுவிடம் விடை பெற்றுக் கொண்டான். வாசல் ரேழியில் கதவோரமாக நிற்கும் அவளை அன்பு கனியப் பார்த்துக் கொண்டே, “போய் விட்டு வரட்டுமா?” என்று கேட்டு, புன்சிரிப்பு சிரித்தான். இன்பமும், துன்பமும் கலந்த உணர்ச்சியால் காமுவின்