சீருடன் வந்த உன் மதனி சம்பகம் இந்த வீட்டில் படும் அவஸ்தையைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாய் சங்கரா? நீயும் ஒரு ஏழைப் பெண்ணைக் கொண்டு வந்து இந்த வீட்டில் அவஸ்தைப்பட விட்டு வைக்கப் போகிறாயா?" என்று கேட்டார் சர்மா.
சங்கரன் காமுவைப் பற்றிக் கூறியபோது, "ஆமாம். ஒன்றும் இல்லாமல் போனால் இரண்டாந்தாரமாக யாருக்காவது கொடுக்கிறதுதானே?" என்று வெகு அலட்சியமாகச் சொன்னாள் மீனாட்சி அம்மாள், தகப்பனார் சர்மாவோ எதிலும் பட்டுக் கொள்ளாதவர். தாய் ஒரு அகங்காரம் பிடித்தவள். சங்கரன் காமுவைப் பற்றி அந்த வீட்டில் யாருடன் பேசுவது? யோசனையில் மூழ்கி இருந்த சங்கரனைச் சம்பகம் வந்து கூப்பிட்டாள்.
"அம்மா உங்களைத் தேடுகிறாரே?' என்றாள் சம்பகம்.
பரிதாபமான அந்த முகத்தைப் பார்த்ததும் சங்கரனுக்குக் காமுவின் வருங்கால வாழ்வு இந்த வீட்டில் இன்னும் பரிதாபமாக ஆகிவிடக் கூடும் என்று தோன்றியது.
'மன்னி, எனக்கு ஏனோ கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணமே இல்லை?" என்று கூறினான் சங்கரன்.
"பெண் நன்றாக இருக்கிறாளாமே? எல்லோரும் பார்த்து விட்டு வந்தார்கள். நீங்களும் பார்த்திருக்கிறீர்களாம். "
"பெண் பார்ப்பதற்கு நீங்கள் போக வில்லையா மன்னி?" என்று ஆச்சரியத்துடன் கேட்டான் சங்கரன்.
"இல்லை. நான் எதற்கு?" அவள் கூறிய பதிலில் அந்தக் குடும்பத்தின் மனோபாவம் பளிங்கு போல் தெரிந்தது.
"சம்பகம் எதற்கு? வாழாவெட்டி! கணவனால் கை விடப்பட்டவள் எதற்கு?''- இவ்வாறு எண்ணியபோது, சங்கரனுக்கு மூளையே குழம்பி விடும் போல் ஆகிவிட்டது.