"குழந்தை! ஆசையும், பாசமும்தான் மனுஷனுக்கு விரோதிகள். எதிலும் பற்றில்லாமல் இருப்பவன் தான் ஞானி" என்று ராமபத்திரய்யர் வேதாந்தம் பேச ஆரம்பித்தார்.
காமு கடிதங்களை எடுத்துப்பார்த்தாள் மூன்றாந்தார மாக எந்த இளம் பெண்ணின் வாழ்க்கையையோ பாழாக்க முயலும் கல்யாணக் சுயநலக்காரனின் கடிதத்தைப் படித்ததும் அவளுக்குச் சிரிப்பு வந்தது. வாய் வேதாந்தம் பேசிவிட்டுப் பெரிய லட்சியவாதி போல் நடித்த சங்கரனின் கயநலத்தைக் கண்டும் அந்த ஏழை சிரிக்கத்தான் செய்தாள்.
ஆனால், சிறிது நேரத்துக்கெல்லாம் அவள் மனம் அளவு கடந்த துயரத்தில் ஆழ்ந்தது. ஹிருதயத்தை யாரோ கசக்கிப் பிழிவது போன்ற வேதனையை அனுபவித்தாள் காமு. "நீலா, நீலா" என்று பலமுறை தனக்குள் பேசிக் கொண்டாள். தனக்கு எதிரியாகத் தன்மீது வஞ்சம் தீர்க்கவே நீலா என்று ஒரு பெண்ணை பிரும்மதேவன் சிருஷ்டி செய்து அனுப்பி இருக்க வேண்டும் என்று நினைத்தாள். இல்லாவிடில் அவ்வளவு உறுதியாகத் தன்னை மணப்பதாகக் கூறிச் சென்ற சங்கரனின் மனம் இவ்வளவு சடுதியில் மாறி விடுமா? வெறும் மேடைப் பிரசங்கம் செய்யும் லட்சியவாதியா அவன்? ஆமாம், வாய் கிழியப்பேசி விட்டு, எவ்வளவு பேர் ரகசியமாக வரதட்சணை வாங்கவில்லை? பேசுவது என்னவோ வரதட்சணைக் கொடுமையை எதிர்த்து!
காமுவின் கண்களிலிருந்து பல பலவென்று கண்ணீர் உதிர்ந்தது. அவள் ஏன் அழுகிறாள்? எதற்காக அழுகிறாள்? இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒன்றும் அறியாதிருந்தவளின் மனத்தில், ஆசை வித்தை ஊன்றி அது முளைத்துத் தழைப்பதற்கு முன்பு அதைக் கிள்ளியும் எறிந்தாயிற்று.
காமுவும் ஆழ்ந்த யோசனையில் ஊஞ்சலில் உட்கார்ந்து விட்டாள்.
இது வரையில் வெளியில் யார் வீட்டுக்கோ போய் இருந்த விசாலாட்சியும் வந்து சேர்ந்தாள். அவள் முகம் எப்போதும் போலவே கடுகடுவென்று இருந்தது.
"முத்தையா வேறு கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறானாம். கல்யாணமும் ஏற்பாடாகி விட்டதாம். அந்தப் பிள்ளை சொன்னதை நம்பிக் கொண்டு நீங்கள் பாட்டுக்குப் பேசாமல்