போய் விடுகிறாள். கொஞ்சங் கூட அந்தப் பெண்ணுக்குக் குடுத்தனப் பாங்கே தெரிய வில்லை!"
மீனாட்சி அம்மாளுக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. "சும்மா பேசாதீர்கள் அம்மா. நம் வீட்டில் வேலை செய்யவா நீலு வந்திருக்கிறாள், இத்தனைப் பணத்தோடும், பாக்கியத்தோடும்! பணக்கார இடத்துப்பெண். செல்லமாய் வளர்ந்தவள்" என்று நீலாவுக்காகப் பரிந்து பேசினாள் மாமியார்.
சமையற்கார மாமி மீனாட்சியின் மனத்தையும், குணத்தையும் நினைத்துத் தனக்குள் சிரித்திருக்க வேண்டும். இல்லாவிடில் அடுப்பங்கரையில் மீனாட்சி பேசிக் கொண்டிருக்கும் போதே, சர்மாவிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு தன் வேலையைக் கவனிக்க வெளியே போவாளா?
"நீங்கள்தான் வேலைக்காரிக்கும் சமையல்காரிக்கும், நாட்டுப் பெண்ணுக்கும் இடம் கொடுத்து எனக்கு மரியாதை இல்லாமல் செய்கிறீர்கள்?" என்று கணவன் மீது கோபத்தைக் காட்டினாள் மீனாட்சி.
"சமையற்காரிதான். நாம் தான் மாதம் இருபது ரூபாய் அவளுக்குச் சம்பளம் கொடுக்கிறோம். எதற்காகத் தெரியுமா? வீட்டை உன்னாலும், உன் பெண்ணாலும், வரப் போகும் நாட்டுப் பெண்ணாலும் கவனித்துக் கொள்ள முடியாது என்றுதான்! இருந்தாலும் அவளும் மனுஷிதானே? சற்று காற்றாடப் போய்விட்டு, இரவு சமையலுக்கு வந்து விடுகிறாள்!" என்றார் சர்மா. முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடிக்க மீனாட்சி எழுந்து போய் விட்டாள்.
பெண்ணால் இரண்டு இடங்களும் விளங்குவதாகப் பெரியவர்கள் கூறுகிறார்கள். உலகத்தை இயக்கும் மகா சக்தியைப் பெண் வடிவில் போற்றுகிறோம். பூமியைப் பெண்ணாக மதிக்கிறோம். பிறந்த நாட்டைத் தாய் நாடு என்று கௌரவிக்கிறோம். 'அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்' என்று அன்னையை முதலில் தொழுகிறோம். இன்றும் நம் சமூகத்தில் பெண்ணின் வாழ்வு அவலமாகத் தான் இருக்கிறது. தினசரியைப் பிரித்தால் தினம் மனைவி மக்களை ஏதோ ஒரு காரணம் கொண்டு கொலை செய்து, பிறகு தாங்களும் மடியும் ஆண்களைப் பற்றி வாசிக்கிறோம். பெண்களைத் தாய்மார்களாகவும், சகோதரிகளாகவும் பாவிக்கும் குணம் அநேகரிடம் இல்லை. கணவன் வீட்டில் சுகதுக்கங்களை அனுபவிக்க வரும்