இருக்கிறீர்களே?” என்று கணவனிடம் கேட்டாள் விசாலாட்சி.
"இனிமேல் எனக்கு யார் வார்த்தையிலும் நம்பிக்கை இல்லை" என்று 'சூள் கொட்டிவிட்டு எழுந்தார் ராமபத்திரய்யர். திடீரென்று ஏற்பட்ட அதிர்ச்சியால் அவர் இன்னும் பத்து வயது அதிகமானவர் போன்று தோற்றம் அளித்தார். சாந்தம் ததும்பும் அவர் கண்களிலும் கண்ணீர் ததும்பிக் கொண்டிருந்தது.
"என்ன" என்று பதட்டத்துடன் கேட்டாள் விசாலாட்சி.
"நடேசனின் பிள்ளைக்கும் கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கிறது. கடுதாசி வந்திருக்கிறது" என்று வருத்தம் தோய்ந்த குரலில் கூறினார் அவர்.
"பின்னே என்னவாம்? உங்கள் பெண்ணை ஓடி வந்து பண்ணிக் கொள்ளுவான் என்று பார்த்தீர்களா? எனக்கு அப்பவே தெரியுமே?" என்று நீட்டி முழக்கினாள் விசாலாட்சி.
தாயின் கடுஞ் சொற்கள் ஊசி கொண்டு குத்துவது போல் இருந்தது காமுவுக்கு. வேதனையும் துயரமும் மனத்தை அழுத்த, அவள் பூஜை அறைக்குள் சென்று தரையில் படுத்து மாலை மாலையாகக் கண்ணீர் உகுத்தாள். அவள் வேதனைக்கு அந்த ஆண்டவனாவது முடிவு ஏற்படுத்துவானோ என்பது அவளுக்கே புரியாத புதிராக இருந்தது!
----
நாட்கள் ஓடின. சங்கரன் - நீலா கல்யாணப் புகைப் படம் ஒரு தினசரி, வாரப் பதிப்பு, மாத சஞ்சிகை பாக்கி இல்லாமல் பிரசுரமாயிற்று. அப்பிரதிகளில் சில காமுவின் கைகளிலும் அகப்பட்டன. பெண்ணும், பிள்ளையும் அருகில் ஒட்டி நின்று எடுத்திருந்த அந்தப் படத்தைப் பல தடவைகள் காமு திருப்பித் திருப்பிப் பார்த்தாள். யாருக்கும் தெரியாமல் படத்தைக் கத்தரித்துத் தன் பெட்டியில் புடவைகளுக்கு அடியில் வைத்துக் கொண்டாள். புஸ்தகம் படிக்கக் கொடுத்தவர்களுக்குப் புஸ்தகத்தை எலி கடித்திருக்க வேண்டும் என்று பொய்யும் கூறினாள். இது பைத்தியக்காரத்தனமான செய்கை என்பது அவளுக்குத் தெரிந்துதான் இருந்தது. இருந்தபோதிலும் அதில் அவள் மனத்துக்குக் கொஞ்சமாவது ஆறுதல் கிடைக்கவே, அந்தப் பைத்தியக்காரச் செய்கையைச் செய்தாள் காமு.