செய்வது சம்பகத்தின் வேலையாக இருந்தது. குடும்பத்தைப் பாதுகாப்பவர்கள் பெண்கள். வீட்டை சுவர்க்கமாக மாற்றுவதோ நரகமாக்குவதோ அவர்கள் வேலை.
காமரா அறையில் மூலைக்கு மூலை கொடியில் புடவை களும், ரவிக்கைகளும் தொங்கிக்கொண்டிருந்தன. வெளியில் போகும்போது மட்டும் பகட்டாக உடுத்திக்கொண்டு போய் விட்டு, வீட்டுக்கு வந்து அவைகளைக் கொடியில் தொங்க விட்டிருந்தார்கள் ருக்மிணியும்,அவள் தாயாரும். சர்மாவின் வேதாந்த புஸ்தக அலமாரி மீது தூசு படிந்து ஒட்டடை கூடப் படிய ஆரம்பித்து விட்டது. புஸ்தகம் எடுக்கும் போதெல்லாம் சர்மா நாட்டுப் பெண் சம்பகத்தை நினைத்துக் கொண்டார். சோம்பல் இல்லாமல் சுற்றிச் சுற்றி வேலை செய்த அந்தப் பெண்ணை மாமியாரும், நாத்தனாரும் விரட்டி விரட்டி வேலை வாங்கினார்கள். அவளுக்கு வேலையைத் தவிர வேறு எந்த விஷயமும் தெரிய வேண்டியதில்லை என்று நினைத்திருந்தார்கள். சம்பகம் வீட்டை ஒழுங்காக வைத்துக் கொள்ளத் தெரிந்து கொண் டிருந்தாள். ருசியாகச் சமைக்கத் தெரிந்து கொண்டிருந்தாள். பெரியவர்களிடம் அன்பும், மரியாதையையும் காட்டத் தெரிந்து கொண்டிருந்தாள். ஒழிந்த பொழுதில் வீட்டிற்குத் தேவையான துணிமணிகளைத் தைக்கவும் தெரிந்து கொண்டிருந்தாள்.
மீனாட்சி அம்மாள் சமையலறைக்குள் நுழைந்தபோது, இடைவேளைச் சிற்றுண்டி வேலையை முடித்துவிட்டுச் சமையற்கார மாமி எங்கோ புறப்பட்டுக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்ததும் மீனாட்சிக்குக் கோபம் வந்தது. "என்ன அம்மா இது? வாரத்தில் பத்து நாட்கள் மத்தியானம் எங்கேயாவது புறப்பட்டு விடுகிறீர்கள்?" என்று கோபமாகக் கேட்டாள் மீனாட்சி
"புறப்படாமல் இருக்க முடியுமா, நீங்களே சொல்லுங்கள்!" என்று நிதானமாகக் கேட்டாள் அந்த அம்மாள்.
"புறப்பட வேண்டுமா என்ன? அதிசயமாகத்தான் இருக்கு!" என்று அகங்காரப்பட்டாள் மீனாட்சி.
"நான் சொல்லுகிறேனே என்று கோபித்துக் கொள்ளா தீர்கள் மாமி. சம்பகம் இருக்கும் போது எனக்கு அவள்கூட மாட ஏதாவது ஒத்தாசை செய்வாள். இப்பொழுது ஒரு துரும்பைக்கூட ஒருத்தரும் அசைக்கிறதில்லை. வீட்டிலே சம்பந்திகள் வரதும் போகிறதுமாய் இருக்கிறது. உங்கள் சின்ன நாட்டுப் பெண், காபி குடித்த பாத்திரத்தைக் கூட மேஜை மீதே வைத்துவிட்டுப்