கொடாமல் பேசினாள் சம்பகம்.
"ஆமாம், ஆமாம். இல்லாவிட்டால் ரொம்ப கவனித்து விடுபவர்கள் தான்!” என்று கோபமாகப் பேசினான் தமையன். ஆனால், தடுத்துச் சொல்லாமல் அன்று ரயிலிலேயே அவளையும் பானுவையும் அனுப்பி விட்டான்.
சம்பகம் மறுபடியும் புக்ககம் வந்து சேர்ந்தாள். அழையாத வீட்டுக்கு வரும் விருந்தாளியை வரவேற்பது போல் அவளை அவர்கள் கண்ணெடுத்துக் கூடப் பாராமல் இருந்தனர். மாமனார் மட்டும், "வந்தாயா அம்மா! ஊரிலே உன் தமையன் எல்லோரும் சௌக்கியம் தானே?'' என்று விசாரித்தார். மாமியார் மீனாட்சியும், நாத்தனார் ருக்மிணியும் அவளை ஏன் என்று கூடக் கேட்கவில்லை. 'பாட்டி!' என்று கூப்பிடும் குழந்தை பானுவைக்கூட அந்த அம்மாள் கவனிக்கவில்லை.
"சம்பகம்! நீ இல்லாமல் திண்டாடி விட்டேண்டி அம்மா. வரவாளும்,போறவாளுமாய் என் பாடு ஓய்ந்து விட்டது போ!" என்று சமையற்கார மாமிதான் தன் மட்டற்ற மகிழ்ச்சியை வெளியிட்டாள் அவளிடம்.
சம்பகத்தின் மனம் தன் புது ஓரகத்தியைக் காண ஆசைப்பட்டது. "மிகவும் படித்தவள். பெற்றவர்களுக்கு ஒரே பெண். பணக்கார வீட்டுப் பெண். சாதுவும், வெகுளியுமான சங்கரனின் மனைவி" என்று பலவாறாக நினைத்துக் கொண்டாள் சம்பகம்.
"மாமி! என் ஓரகத்தி வீட்டிற்கு வந்து விட்டாளோ இல்லையோ? காலையிலிருந்து கண்ணிலேயே பட வில்லையே?" என்று மெதுவாக விசாரித்தாள் சமையற்கார மாமியை சம்பகம்.
"வந்திருக்கிறாள்! வராமல் என்ன? அடியே சம்பகம்! உன்னை இவாள் படுத்தி வைக்கிற பாட்டுக்கு அவள் தான் சரி, இந்த வீட்டுக்கு!" என்று விரலை ஆட்டி உற்சாகமாகப் பேசினாள் சமையற்கார மாமி.
தொடரும்...