மருமகள் பல குடும்பங்களில் கேவலமாக நடத்தப்படுகிறாள். சில குடும்பங்களில் மாமியின் நிலையும் இவ்வாறாக இருக்கின்றது. ஒருவரோடு ஒருவர் சரிக்கட்டிப் போகும் சுபாவம் இல்லாமையே இதற்குக் காரணம்.
சம்பகம் மனச் சாந்திக்காக வந்து தங்கினாள். மண வாழ்க்கையில் பல வருஷங்கள் மாமியாரின் ஏச்சுப் பேச்சுக் களைக் கேட்டுப் புண்பட்டுப் போன மனத்துக்கு ஆறுதலைத் தேடி அங்கே வந்தாள். அங்கே அவள் மதனி- அவளைப் போன்ற ஒரு பெண் - அவளுக்கு கௌரவம் தர மறுத்தாள். வாழா வெட்டி என்கிற அலட்சிய மனப்பான்மையுடன் அவளை ஏசினாள். குழந்தை பானுவுக்குக் கூட அங்கே சுதந்தரம் இல்லாமல் போய்விட்டது.
ஒரு நாள் மாமா குழந்தையின் மோட்டாரை அவள் தான் உடைத்ததாக மாமி கூறினாள். விளையாட்டுச் சாமான் களைத் தொடக்கூடாது என்று குழந்தைக்குத் தெரியுமா என்ன? குழந்தை மனத்துக்கு பேதம் தெரியக் காரணம் இல்லையே! சம்பகத்தின் தமையனும் தங்கையிடம் ஒரு மாதிரியாகப் பேச ஆரம்பித்தான்.
"எத்தனை நாளைக்குத்தான் ஒருத்தரிடம் ஏச்சும் பேச்சும் கேட்டுக் கொண்டிருப்பாய்? பேசாமல் நர்ஸ்கள் பள்ளிக்கூடத்தில்' சேர்ந்து விடு. நீ மாத்திரம் ஒண்டிக் கட்டை இல்லை, பார்! குழந்தை வேறு இருக்கிறது" என்று தமையன் ஆலோசனை கூறினான்.
கணவன் வீட்டில் செல்வம் இருக்கிறது. ஒவ்வொரு வேளையும் வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட்டு வெளியார் நான்கு பேர்கள் வேறு சாப்பிடுகிறார்கள். சம்பகமும், அவள் பெண்ணும் தண்டச்சோறு தின்பதாகவே மீனாட்சி அம்மாள் கூறி வந்தாள்! இங்கே தமையன் வீட்டிலும் செல்வம் கொழிக்கிறது. மாதம் நாலு பங்களூர் 'கிரேப்' புடவைகள் மதனி வாங்குகிறாள். வானத்து நட்சத்திரங்களும், மரத்தில் காய்க்கும் காய்களும், இலைகளும், பூவும் அவள் கழுத்தில் தங்க ஆபரணங்களாகத் துவண்டு கொண் டிருந்தன. ஆனால், கணவனால் நிராதரவாக விடப்பட்ட நாத்தனார் தன் வீட்டில் தண்டச்சோறு தின்பதாகவே மதனி நினைத்தாள்.
தமையனும் வீட்டில் தங்கை என்ற ஒருத்தி இருப்ப தாகவே நினைக்கவில்லை. அவளாகவே பேச வந்தாலும் முகம் கொடுத்துப் பேசுவதில்லை.