வீணான வார்த்தைகளைக் கூறி மனத்தை நோகச் செய்ய வேண்டாம்; போய் வருகிறேன்" என்று கூறி வெளியில் வந்தான். கேவலம் சிறிய பாலகனாக விருப்பினும் அவனுடைய மன வேதனையினால் அவன் பெரிய குடும்பஸ்தன் போலவே தவிக்கலானான்.
அவ்வீடு விட்டதும், இனி தான் எங்கு செல்வதென்று யோசித்துப் புலம்பியவாறு நடக்கையில் எதிரில் ஒரு ஸைகில் வண்டி வந்தது. அதற்குப் பக்கத்தில் ஒரு மோட்டார் வந்து விட்டதால் கேசவன் தட்டுத் தடுமாறி மத்தியில் நின்று விட்டான் ஸைகிலில் வந்த மனிதன், திடீரென்று போட்ட பிரேக்கினால் கீழே விழுந்து விட்டான். விழுந்தவன் எழுந்து "அடேய் தடிப்பயலே. உனக்குக் கடவுள் கண் கொடுக்க வில்லையா! வீதியில் பார்த்து நடக்காமல் என் வண்டியில் மோதும்படி அஜாக்கிரதையாக நடந்து வந்து என் வண்டிக்குச் சேதம் உண்டாக்கினாயே கழுதை!" என்று கூறிக் கேசவனை இழுத்து முதுகிலும்,கன்னத்திலும் நான்கு அறைகள் விட்டு "ஓடு நாயே !" என்று கூறிவிட்டுச் சென்று விட்டான்.
அந்த மகானுபாவன் கையில் மோதிரம் போட்டுக் கொண்டிருந்தான். அம் மோதிரத்தின் கூர்மையானது உள் பக்கம் திரும்பி யிருந்ததைக் கவனிக்காது 'பளீர் பளீர்' என்று அடித்ததால் அது முதுகில் நன்றாகக் கீறி ரத்தம் பீறிட்டுக் கொண்டது. கேசவன் இந்த பாதையைக் கூடப் பொருட் படுத்தவில்லை. தன் தாயாரைத் தனித்துவிட்டு வந்த நினைவு அதிகமாய் மனத்தில் வேலை செய்ததால் அதையே நினைத்து "இதுவும் நம் தலைவிதி " என்று நடக்க வாரம்பித்தான்.
----
ஓர் வீட்டுத் திண்ணையில் மேளம் அடிப்பதைக் கண்டு அங்கு ஓடி "ஐயா! என் தாயாருக்கு அதிக களைப்பாக இருக்கிறது. கொஞ்சம் ஏதேனும் ஆகாரம் வேண்டும் " என்று செஞ்சிக் கேட்டான். சமையற்காரனே மனமிரங்கி சில பக்ஷணங்களும், காப்பியும் கொண்டு வந்து கொடுத்தான். கேசவன் பரம சந்தோஷத்துடன் அதை வாங்கிக் கொண்டு தன் தாயை நோக்கி ஓடிவந்தான்.
மரத்தடியில் ஒருவரும் இல்லாததைக் கண்டு திடுக்கிட்டு "ஹா! அம்மா எங்கே சென்றிருப்பாள்?” என்று மிக்க விசனத்தோடு நாற்புறமும் பார்த்தான். குழந்தையையும் காணவில்லை; தாயாரையும் காணாமையினால் கேசவன் மனத்தில் பலவிதமான எண்ணங்கள்