இப்படியே சில வருடங்கள் வேலை செய்து வந்தாள். மூத்த பையனுக்கு 10 வயதாயிற்று. அப் பையனை ஏதேனும் வேலை செய்யும்படியாகக் கோமதி எத்தனை கூறியும் அந்த சோதாப் பபல் தகப்பனுக்கு இரண்டாவதாக ஆய் விட்டதால் பிடிவாதம் செய்துத் தாயை இம்சித்தான். தாயார் மனம் நொந்து கடிந்து திட்டினால் எங்கேனும் ஒடி விடுவது; சாப்பாட்டிற்கு வராது அழ வைப்பது. பிறகு கோமதி கண்ணீர் பெருகத் தேடியலைந்து இழுத்துக் கொண்டு வந்து பெத்த மனம் பித்து என்பது போல உணவிட்டு உபசரிப்பது. அந்தப் பையனை நல்ல வார்த்தை சொல்லி சித்தாள் வேலைக்கு அனுப்பினாள்.
----
"வரம்பு கடந்து பேசினால் பல்லை உடைத்து விடுவேன்" என்கிறான் ஒருவன். அவனை வரம்பு கடக்கும்படியான ஆத்திரத்தைத் தானே உண்டாக்கி விட்டதை அவன் மனம் நினைப்பதே இல்லை.
-----
சித்தாள் வேலைக்குக் கிடைக்கும் ஆறு அணாக் கூலியை அவன் கண்டபடி ஏதேனும் வாங்கித் தின்று விடவும்,சரியாகக் கொண்டு தாயிடம் கொடாமல் சண்டித்தனம் செய்யவும் தொடங்கினான். அவ்வாறு செய்யும் திருட்டுத்தனத்தை யறிந்த கோமதி நேரே மேஸ்த்ரியிடம் சென்று "கூலியைப் பையன் கையில் கொடுக்க வேண்டாம்; என்னிடம் கொடுங்கள்" என்று கூறிவிட்டாள். இதையறிந்த பையன் தாயார் பணம் வைக்கும் இடத்தை யறிந்து திருட வாரம்பித்தான். மகனோ திருட்டுக் கொட்டு; மணவாளனோ குடிகார வேசிக் கள்வன். இத்தகைய இருவரையும் படைத்த நங்கையின் கதி எவ்விதம் தானிருக்கும்?
இரண்டாவது பையன் சற்று அடங்கியவன். அவனுக்கு 9 வயதாகிறது. அப் பயல் தரும பாடசாலையில் சேர்ந்து படிக்கத் தொடங்கினான். அதற்கடுத்தது 7 வயதுப் பெண். கையிலிருப்பதும் பெண் குழந்தை. இந்த ஏழு வயதுப் பெண் குழந்தை தாயார் வேலை செய்யப் போகையில் சின்ன குழந்தையை வைத்துக் கொண்டிருப்பது. இவ்விதமே, பின்னும் சில காலம் சென்றது.