மறைத்துத் தணிக்க வாரம்பித்தன. இந்த நிலைமையில் எங்கு செல்வதென்று தெரியாது சிறிது தூரம் சென்றதும் கோமதிக்கு அசாத்யமான துக்கத்தினாலும்,அப்போதிய நிலைமையின் பலஹீனத்தினாலும் அதற்குமேல் நடக்கமாட்டாது கால் துவண்டு கீழே தள்ளவாரம்பித்துவிட்டது.
-----
இவளுடைய நிலைமையைக் கண்ட கேசவன் மிக்க மனம் வருந்தி "அம்மா! உன்னால் நடக்க முடியவில்லை என்பதை யறிகிறேன். என் மனம் தத்தளிக்கின்றது. இதோ ஓர் மரம் இருக்கின்றது. இதனடியில் சற்று உட்கார்ந்திருப்போம். உன் களை தெளிந்ததும் பிறகு நடக்கலாம்." என்று கூறி அம்மரத்தடியில் சாமான்களை வைத்துவிட்டுத் தாயாரை உட்காரச்செய்தான். கோமதியின் தரித்திர திசையில் முதல் நாள் இரவு முற்றும் சுத்த பட்டினியாகையினாலும், அன்று காலை முதல் அலைச்சல் அதிகரித்ததனாலும் அவளுக்குத் தாங்கவியலாத களைப்பு மேலிட்டுவிட்டது. இந்நிலைமையில் மகா போக்கிரியாகிய முதல் மகன்மீது நினைவு தாவிப் பதிந்தது. இத்தகைய சோகத்தினால் அவள் மயக்கத்தி லாழ்ந்தாள்.
மகா உத்தம புத்திரனாகிய கேசவன் அவளுடைய நிலைமையைக் கண்டு பரிதபித்துத் தன் தங்கையை நோக்கி "பாலா! நான் வெளியில் சென்று அம்மாவுக்குச் சிறிது ஆகாரம் வாங்கிக்கொண்டு வருகிறேன். இங்கு ஜாக்கிரதையாக அம்மாவைப் பார்த்துக்கொள்” என்று கூறி, ஒர் தகரக் குவளையைக் கையில் எடுத்துக்கொண்டு சென்றான். எங்கு செல்வதென்பதை யறியாவிடினும் தாயிடத் துள்ள பாசத்தினால் விரைவில் ஓர் காபி ஒட்டலை அடைந்தான். அப்போது அகாலமாகையினால் ஓட்டலில் ஒன்றும் தயாராக இல்லை. அதைக் கண்டு வருந்திய கேசவன் அவ்வோட்டலுக்கு அடுத்திருந்த வீட்டிற்குச் சென்று “அம்மா! பரதேசி ஏழை; ஒரு கவளம் அன்னம் கொடுத்தால் மிக்க புண்ணியமுண்டு” என்று கேட்டான்.
-----
இந்த குரல் கேட்டு வெளிவந்த வீட்டுக்காரி "ஏனடா கொட்டாப்புளி தடியா! பிச்சைக்காரன் போல வந்து ஏதேனும் அகப் பட்டதைச் சுருட்டிக் கொண்டு போக நினைக்கின்றாயா! ஒடு வெளியில்'' என்று அதட்டினாள். அந்தோ! சுடுச்சரம் போன்ற அவ் வார்த்தையைக் கேட்ட கேசவன் மன முருகிப்போய், "தாயே ! 'பிச்சை இல்லை' என்றால் நான் போய் விடுகிறேன்.