பரிமள:- என் அன்பரே! எத்தகைய சந்தோஷம் தங்களுக்கு வந்த போதிலும் அதில் நானும் சமபாகம் பெற்றவளன்றா! தாங்கள் அன்று தெரிவித்தபோது என் மனம் என்ன சங்கடத்தை அடைந்தது தெரியுமா! அதைச் சொல்வதற்கே முடியாது. இப்போதுதான் பேராநந்தமாயிற்று. தாங்கள் எனக்குச் சொல்லியதுபோலத் தாங்களும் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்; சீக்கிரம் வந்து விடுங்கள்.
கேசவன்:-நான் எதற்காகத் தாமதிக்க வேண்டும்? அங்கு சென்று அவர்களை அழைத்துக் கொண்டு உடனே திரும்ப வேண்டி யதுதான்; கடவுளின் அனுக்ரகம் பூர்ணமாக இருக்கும் பரியந்தம் குறைவென்ன! நான் சென்று வாட்டுமா! கண்மணி!" என்றான்.
அன்பு மீறிய பரவசத்தினால் அவர்களை யறியாமலேயே இருவர் கரங்களும் சந்தித்துக் கொண்டன. அடுத்த நிமிடம் கேசவன் தனிப்பட்டு வெளியே சென்று பிரயாணத்திற்கு ஆயத்தமானான். எஜமானரும் அவன் செலவுக்குப் பணத்தைக் கொடுத்து “அப்பா! சென்று ஜாக்ரதையாகத் திரும்பு. பணம் போதாவிடில் கடிதம் எழுது; நான் மணியார்டர் செய்கிறேன். ஜாக்கிரதை. இந்த தகவலை நாயுடுவிடம் தெரிவித்து விடலாமென்று அங்கு சென்றேன். நாயுடு ஊரிலில்லையாம்; வந்து விட்டேன்! ஜாக்ரதை!" என்று கூறி வண்டி ஏற்றி அனுப்பி விட்டார். பிற்கு கேசவன் அன்னையைப் பார்க்கச் செல்லும் பேராவலினால் தூண்டப்பட்டு “எப்போது தாயி னருகில் செல்வோம்?" "என்று எதிர்பார்த்தபடியே ரயிலில் செல்கிறான்.
சரியாய் இரவு 11 மணிக்கு அவன் செல்ல வேண்டிய ஊரில் ரயில் நின்றதும் இறங்கினான். முன்னே பின்னே சென்றறியாத ஊராகையினால் ரயிலடியிலேயே ஒரு வண்டியமர்த்திக் கொண்டு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள வீட்டிற்குக் கொண்டு நிறுத்தச் செய்தான். வண்டியும் அவ்வாறே வந்து நின்றது. அப்போதுதான் கலியாண வீட்டில் எல்லோரும் சாப்பிட்டு விட்டு வீதித் திண்ணையில் பேசிக் கொண்டே படுத்திருந்தார்கள்.
கேசவன் வண்டியை விட்டு இறங்கி, விவாக வீட்டிற்குச் சென்றான். எல்லோரும் புதிய மனிதர்களாகையினால் திடீரென்று தன் விவரத்தைக் கூறத்தியங்கினான். அங்குள்ளவர்கள் "நீங்கள் யார்? எங்கே வந்தீர்கள்? சம்மந்தி வீட்டாரைச் சேர்ந்தவர்களா, அவர்கள் அடுத்த வீதியில் இருக்கிறார்கள்." என்றார்கள்.