"என் ப்ராண நாதா!
இது பரியந்தம் உங்களுக்கு ஒரு கடிதங்கூட எழுதாம லிருந்த நான் இக் கடிதம் எழுதுவது கண்டு நீங்கள் வியப்புறலாம். இன்றுதான் ஒரு முக்கியமான விஷயம் தெரிந்ததால் நான் இதை எழுதலானேன். நீங்கள் அக்ரமமாக ஜெமீந்தார் என்கிற பட்டத்துடன் பரிமளாவை அபகரிக்க எண்ணி இருப்பதாக உங்கள் சினேகிதன் பாலனால் தெரிந்து கொண்டேன். அந்த அக்ரமத்திலிருந்து உங்களை விடுவிக்கும் பொருட்டும், பரிமளா யார் என்பதை உங்களுக்கு எடுத்துரைக்கும் பொருட்டும் நான் இக் கடிதம் எழுதலானேன்.
எனது தாயாருடன் பிறந்த மாமன் சொக்கலிங்கம் என்பவர் மகா பரிசுத்தவானாயும், சீலராயும் இருந்தார். அவருடைய பாரியாளான பார்வதியம்மாளும் வெகு நற்குணவதியாய் இருந்து வந்தாள். அவர் மிலிடரி வேலையிலிருந்தார். கோமளா சிறு குழந்தையாக இருக்கையில், அவரது மனைவி கர்ப்பவதியாயிருந்தாள். அச்சமயம் அவர் ஓர் யுத்தத்திற்குச் சென்று சண்டை செய்யும்படியாக மேலதிகாரிகளிடமிருந்து உத்தரவு வந்து விட்டது. அதையவர் பார்த்ததும் இடி விழுந்தவர் போலானார். "நான் யுத்தத்திற்குச் சென்றால் இனி திரும்புவதேது! என் காலம் முடிந்து விட்டது. ஐயோ! மனைவியையும் குழந்தையையும் நடுச்சந்தியில் விட்டுவிடுகிறேனே!" என்று மிக்க விசனித்துப் புலம்பினார். அதிகாரிகளின் உத்தரவுப்படி நடக்காவிடில் உடனே கடுந்தண்டனை யடைய நேரும். ஆதலால் தன் முடிவை யறிந்தே சென்றார்; சென்றவிடத்தில் மாண்டார்.
பிறகு என் மாமி கருப்பமாயிருந்தது பெண் குழந்தையாகப் பிறந்தது. இரு குழந்தைகளுடனும் நிற்க நிழலின்றி தத்தளித்து என் தாயாரிடம் அண்டினாள். அக் காலத்தில் என் தாயார் அவள் மாமியார், மாமனாரின் ஆக்கினைப்படி நடக்க வேண்டிய நிலைமையிலிருந்த- மையினால் அவள் பயந்து நடுங்கி நடந்தாள். கொஞ்ச நாளாகியதும் என் பாட்டியும் தந்தையும் அவர்களைத் திட்டி விரட்டி விட்டார்களாம். அன்று மனத் துயரத்துடன் சென்ற என் மாமியும் இரு குழந்தைகளும் சென்றவிடம் தெரியாமல் போய் விட்டது. இன்று விவரம் விசாரித்ததில் கோமளாவென்ற பெயரை பரிமளாவென்று மாற்றிக் கொண்டிருப்பதாயும் அவள் ஏழ்மையின் கொடுமையினால் நாடகத்தில் நடித்ததாயும், அவள் மகா உத்தமி என்றும் தெரிய வந்தது. அதை அறிந்ததும் என் மனம் தத்தளிக்கின்றது. என் தாயார் தள்ளாத கிழவியாகிவிட்ட போதிலும்