வஸ: விருத்தம்: சங்கராபாணம்
மறையவர் மணியே! நுங்கள்மதிப்பிலாத்தனங்கள் யாவும்
மறைந்தன வேனுமென்று மகலுமோ புகழும் பேரும்?
நிறைவழா வரிய நீர்மை நீங்கிடாச் செல்வ மாகக்
குறைவினி யுங்கட் குண்டோ கோதிலாக் குணத்தின் மேலோய்
பிரபு! தங்களுக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை. உலகத்தில் யாவரும், தனவந்தர்களையே மதிக்கிறார்கள் என்பதும் ஏழைகளை இகழ்ந்து அவமதிக்கிறார்கள் என்பதும் முற்றும் நிஜமல்ல. ஒருவன் பரம தரித்திரனாய் இருந்த போதிலும் அவனிடத்தில் நற்குண நல்லொழுக்கமும் நீதி நெறி வழுவாமல் நடக்கும் மனோதிடமும் இருக்குமாயின், ஜனங்கள் அவனை எவ்வளவோ பாராட்டிப் பெருமைப்படுத்துகிறார்கள். ஒரு தனிகனிடத்தில் நற்குணம் இல்லாவிட்டால், ஜனங்கள் வெளிக்கு அதைக் காட்டாமல் அவனை மேன்மைப்படுத்தின போதிலும், உள்ளுற அவனை இகழ்வதே உலக இயல்பு. ஆகையால், தங்கம் குப்பையில் கிடந்த போதிலும் அதன் அருமை பெருமைகள் ஒரு நாளும் அதற்கில்லாமல் போகா. எவரோ நன்றியற்ற சிலர் உங்களை மறந்த போதிலும், இந்த நகரத்தினர் பெரும் பாலரும் உங்களுடைய மேன்மையை நினைத்த வண்ணம் இருக்கின்றனர். ஸ்வாமி பிறருக்குக் கொடுக்கப் பொருள் இல்லையே என்று தாங்கள் இனிச் சிறிதும் கவலைப்பட வேண் டாம். இந்த அடிமைக்கு ஏராளமாக பொருள்கள் தேவைக்கு அதிகமாகக் குவிந்து கிடக்கின்றன. அவற்றைத் தங்களுக்கு அர்ப்பணம் செய்து விட்டேன். அவற்றை இனித் தங்கள் இச்சைப் படி உபயோகித்துக் கொள்ளலாம். தாங்கள் இதற்காகச் சிறிதும் வருந்த வேண்டாம்.
மாத : (தனக்குள்) ஆகா! என்ன மேன்மைக் குணம் கற்பாறையில் தாமரை பூத்ததைப் போலவும், ஆலகால விஷத்தைக் கொண்ட ஸர்ப்பத்தின் தலையில் மாணிக்கம் உண்டானது போலவும், ஈவிரக்கம் என்பதே இல்லாத தாஸியின் குலத்தில் இவ்விதமான உத்தமி வந்துதித்தது விந்தையிலும் விந்தையே! (உரக்க) ஹே! பெண்மணி வஸந்தஸேனை! உன்னுடைய அழகிய மொழியைக் கேட்டுப் பரமானந்தம் அடைந்தேன்! இவ்வளவு தயை