வஸ : மிகவும் சந்தோஷம். அவருடைய தேஜோ மயமான அழகை நான் இன்னம் பூர்த்தியாக என் கண்ணாரப் பார்க்க வில்லை. இன்று என் கண்களுக்கு நல்ல விருந்து செய்கிறேன். இது எந்த இடம்? பொக்கிஷம் வைக்கும் இடத்தைப் போலக் காணப்படுகிறதே! ஆகா! அவர் என் பேரில் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார் மிகவும் அந்தரங்கமான இடத்தில் அல்லவோ நுழைந்து சயனித்துக் கொண்டிருக்கிறேன்.
தோழி : அந்தரங்கமான இடத்தில் மாத்திரம் அல்ல: ஒவ்வொருவருடைய ஹிருதயத்திற்குள்ளும் நுழைந்து விட்டீர்கள்!
வஸ: இல்லை, இல்லை. இவரைச் சேர்ந்தவர்கள் என் பேரில் கோபம் கொண்டிருப்பார்களோ என்னமோ தெரியவில்லை!
தோழி: அவர்களுக்கு இனிமேலேதான் ஒரு வேளை வருத்தம் உண்டாகும்.
வஸ : ஏன்?
தோழி : நீங்கள் புறப்பட்டுப் போவதினால்.
வஸ : ஆகா! அப்படியா! மற்றவர்களும் என்னை அவ்வளவு விரும்புகிறார்களா அதுவும் ஒரு பாக்கியந்தான். அவருடைய மனைவியாகிய உத்தமி என்னை இரவில் பார்த்த பொழுது, என்னிடத்தில் அன்பான முகத்தைக் காட்டி எனக்கு எவ்வளவு உபசாரம் செய்தார்கள். புருஷனுக்குத் தகுந்த மனைவியே! நற்குணமே நிறைந்த இவர்களை விட்டுப் பிரிந்து போக சகிக்கவில்லை. அடி ஸகி! இதோ இந்த வைர ஸரத்தை எடுத்துக் கொண்டு போய் என்னுடைய அரிய சகோதரியாகிய கோகிலத்தினிடம் சேர்ப்பித்து, நான் மாதவராயருடைய பணிப் பெண் என்றும், கோகிலத்தின் அடிமை என்றும் தெரிவித்து, இந்த மாலை எந்தக் கழுத்திற்கு உரியதோ அதை இந்த ஸரத்தால் அலங்கரித்துக் கொள்ள நான் வேண்டியதாய்க் கேட்டுக் கொள்.
தோழி : நமது எஜமானருக்கு இது திருப்தியாய் இராதே.