குற்றம் ஆகும்? நான் என் குடிசையில் சுயேச்சையாக இருந்தேன். இப்பொழுது காராக்கிரக வாசம் கிடைத்ததே; இதுதான் கை கண்ட பலன். நான் விதிவசத்தினால் அரசனானால் என் விதியை அல்லவோ சிறைச்சாலையில் அடைக்க வேண்டும். அல்லது இந்த தேசத்தரசன் தன் அரசை இழக்க நேர்ந்த தன்னுடைய தலைவிதியை நினைத்து அல்லவோ அழ வேண்டும். நல்ல காரியம் செய்தான்! நான் இப்பொழுது எங்கே ஒளிந்து கொள்கிறது என்னைத் துரத்திக் கொண்டு பின்னால் அநேகர் ஓடி வருகிறார்கள் இந்தப் பெருத்த மாளிகையின் வாசல் திறந்திருப்பது என்னை உள்ளே வரும்படி அழைப்பதைப் போல் இருக்கிறது. இதில் நுழைந்து கதவின் மூலையில் சற்று மறைந்து கொள்ளுகிறேன். துரத்திக்கொண்டு வருபவர் போய் விடட்டும்.
(மாதவராயருடைய வீட்டின் கதவு மூலையின் மறைந்து கொள்கிறான். சற்று நேரத்தில் குணசீலன் வாசலில் பெட்டி வண்டியுடன் வந்து நிற்கிறான்.)
குண : (உரக்கக் கூவி) கோமளா வண்டி வந்து விட்டது! வஸந்தஸேனை அம்மாளை வரச்சொல் நேரமாகிறது. எஜமானர் பங்களாவில் காத்துக் கொண்டிருப்பார்.
பிரதா : (தனக்குள்) சரி! நல்ல வேளைதான். இதோ இந்த மூடு பெட்டி வண்டி நமக்காகத்தான் கடவுளால் அனுப்பப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது. இதுவும் பாக்கியந்தான். நல்லது ஒரு காரியம் செய்கிறேன். இதில் யாரோ ஒரு ஸ்திரீ ஏறிக் கொண்டு ஊருக்கு வெளியில் இருக்கும் பங்களாவிற்குப் போகிறாள் போல் இருக்கிறது! நான் இதற்குள் ஏறி உட்கார்ந்து கொள்கிறேன். அவள் வந்து ஏறினால் என்னை ஊருக்கு வெளியில் கொண்டு போய் விடும்படி மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். (பிரதாபன் பின்புறமாக வண்டிக்குள் ஏறிக் கொள்கிறான். அவன் பேரில் இருந்த சங்கிலியின் ஓசையைக் கேட்ட குணசீலன், வஸந்தவேனை ஏறிக் கொண்டதாக நினைக்கிறான்.)
குண: (தனக்குள்) இந்த வஸந்தஸேனையின்பேரில் எத்தனை ஆபரணங்கள் கலீர் கலீர் என்னும் சப்தம் எவ்வளவு தூரம் கேட்கிறது! ஐசுவரியம் இருந்தால் என் பெண்சாதிக்குக்கூட உச்சி முதல் உள்ளங்கால் வரையில் நகைகளை மாட்டி விடுவேன். ஏழையாய் இருக்கும் நம்முடைய எஜமானருக்கு இது நல்ல காலந்தான். நல்ல கறவைப் பசு வந்து வலையில் அகப்பட்டது. சரி நேரமாகிறது, ஓட்டிக் கொண்டு போகிறேன்.