(வண்டியை ஓட்டிக் கொண்டு வேறொரு தெருவிற்கு வருகிறான். அங்கு காவற்காரர்களின் தலைவன் வீரகனும் சில காவற்காரர்களும் வருகிறார்கள்.)
வீரகன் : அடே! ஓடி வாருங்கள்! சீக்கிரம் ஓடி வாருங்கள்! அந்தத் துஷ்டன் எங்கே போன போதிலும் விடக்கூடாது. நீங்கள் கோட்டையின் நான்கு வாசல்களிற்கும் போய் வளைத்துக் கொள்ளுங்கள். அவன் எப்படி நகரை விட்டு வெளியில் போகிறான் பார்க்கலாம்.
(காவற்காரர்கள் போய் விடுகிறார்கள். இன்னொரு காவல் தலைவன் சந்தானகன் வேறு சிலருடன் இன்னொரு புறமாக வருகிறான்.)
சந்தா : ஓடுங்கள்! ஓடுங்கள்! நாம் இராஜ்யத்தை ஒரு நாளும் வேறொருவனுக்கு விடக்கூடாது. வீதிகள், தெருக்கள், சந்துக்கள், தோட்டங்கள் முதலிய எந்த இடத்தையும் பாக்கி விடாமல் தேடுங்கள். அவனைக் கண்டுபிடிப்பவனுக்கு நல்ல சன்மானமும் வாங்கித் தருகிறேன்.
வீர : அவன் தனியாக எப்படித் தப்பித்துக் கொண்டு போகக் கூடும். அவனுடைய யாராவது துணைவர் இருந்திருக்க வேண்டும்.
சந்தா : அவன் இராத்திரியே போயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இதற்குள் மாயமாய்ப் பறந்தா போய்விட்டான்.
(குணசீலன் வண்டியை ஓட்டிக் கொண்டு வருகிறான்)
சந்தா : ஆகா! அதோ ஒரு பெட்டி வண்டி போகிறதைப் பார்த்தாயா? அது யாருடையது; எங்கே போகிறதென்று விசாரி.
வீர : அடே! வண்டிக்காரா நிறுத்து. அது யாருடைய வண்டி? உள்ளே இருப்பது யார்? எங்கே ஒட்டிக் கொண்டு போகிறாய்?
குண : ஐயா! இது மாதவராயருடைய வண்டி! இதற்குள் வஸந்தஸேனை இருக்கிறாள். அவருடைய பங்களாவிற்கு அழைத்துப் போகிறேன்.