வஸ : (கண்ணைத்துடைத்துக் கொண்டு) கண்ணே! பாக்கியமே! நான் அழவில்லை. நீ இவைகளை எடுத்துக் கொண்டு போய் பொன் வண்டி வாங்கிக் கொள். (நகைகளை வண்டியில் நிறப்புகிறாள்)
குழ: நீ இப்பொழுது கொடுப்பாய்; திரும்பக் கேட்பாய்; எனக்கு வேண்டாம்.
வஸ : நான் இனிமேல் கேட்கவே மாட்டேன். நிச்சயம்.
குழ : இந்த நகைகளால் வண்டி எப்படிச் செய்கிறது! என்னுடைய அம்மாள் கோபித்துக் கொள்வாள். எனக்கு வேண்டாம். நீயே எடுத்துக் கொள்.
வஸ : அம்மாள் கோபித்துக் கொள்ள மாட்டார்கள். இவைகளைத் தட்டானிடம் விற்று விட்டுப் பொன் வாங்கி வண்டி செய்து கொள்ளலாம். எடுத்துக் கொண்டு போ.
குழ : சரி; அப்படியானால் எடுத்துக் கொண்டு போகட்டுமா? நீ அழ மாட்டாயே. அழுதால் எனக்கு வேண்டாம்.
வஸ : ஆகா! பிதாவைப் போலப் பிறர் மனம் வருந்த சகியாதவன். – கண்ணே! நான் அழவில்லை. நீ எடுத்துக் கொண்டு போ! நான் மறுபடி வரும் போது நீ எனக்கு பொன் வண்டியைக் காட்ட வேண்டும்! காட்டுகிறாயா?
குழ : (சந்தோஷத்துடன்) காட்டுகிறேன். இதை அம்மாளிடம் காட்டப் போகிறேன்.
(ஆபரணங்களுடன் வண்டியை இழுத்துக் கொண்டு வேகமாய்ப் போய் விடுகிறான். கோமளாவும் அவனைத் தொடர்ந்து சென்று சற்று நேரத்தில் திரும்பி வருகிறாள்.)
கோம : அம்மா! வாசலில் குணசீலன் பெட்டி வண்டியைத் தயார் செய்து வைத்திருக்கிறான்.
ഖஸ : என்னுடைய உடைகளைச் சீர்திருத்திக் கொண்டு இதோ வந்து விட்டேன். (மறைவில் போகிறாள்)