இருந்தது போதும்; நான் போகிறேன். இனி உமக்குத் தகுந்த வேறொருவனை வைத்துக் கொள்ளும். நான் போகிறேன்.
வீர : அப்படியா! நீ மிகவும் சாமர்த்தியசாலியாய் இருக்கிறாயே! இந்த ஸ்திரீ ரத்னத்தை இங்கு கொன்றதுமன்றி நான் கேட்டால் என்னைத் தூஷிக்கிறாயா?
தோழ : அழகு! அழகு! யோக்கியமான காரியம்! இவ்வளவு மேலான குணம் யாருக்கு வரும்?
வீர: வாவா! கோபிக்காதே கோபம் பொல்லாதது அல்லவா? அதில் இவ்விதமான காரியம் செய்வது மனிஷ்ய ஸ்வபாவந் தானே உனக்குத் தேவையான பொருள் தருகிறேன். வா போக லாம்.
தோழ : ஐயா! போதும்! உம்முடைய வெகுமதியும் வேண்டாம்; உம்முடைய நட்பும் வேண்டாம்! இனிமேல் நாம் இருவரும் விரோதிகளாக இருப்போம். அவமானத்தை உண்டாக்கும் நட்பு எனக்குத் தேவையில்லை. நாம் இருவரும் இனி ஒருக்காலும் சேருவது இல்லை. இத்துடன் நமது ஸ்நேகம் ஒழிந்தது.
வீர : பிரிய நண்பா! என்ன இப்படிக் கோபித்துக் கொள்கிறாய்! நேரமாகிறது; ஸ்நானத்திற்குப் போவோம் வா!
தோழ : நீர் குற்றமற்றவராய் இருந்த போது உமக்கு நான் எவ்வளவோ பணிந்து நடந்தேன். குற்றவாளியை இனி நான் ஒருக்காலும் பணிய மாட்டேன். அதிலும் ஸ்திரீயைக் கொன்றவனோடா நட்புக் கொள்ள வேண்டும். ஆகா வஸந்தஸேனா உன்னுடைய நற்குணத்திற்கு நீ அடுத்த ஜென்மத்திலாவது சுகம் பெறுவாய். உன்னைக் கொலை செய்ததற்கு ஈசுவரன் எப்படியும் பழி வாங்கி விடுவான். (போகிறான்)
வீர : கொலை செய்து விட்டு எங்கே ஓடப் பார்க்கிறாய்? இராஜாவினிடம் போக வேண்டும். வா என்னுடன்; அங்கு வந்து உன்னுடைய நியாயத்தைச் சொல்லித் தப்பித்துக் கொள். (பிடிக்கிறான்)
தோழ : முட்டாளே! போ அப்பால். (கோபத்தோடு தன் கத்தியை உருவுகிறான்.)