ஆழ்ந்து நினைத்துப் பார்த்தால் இவ்வுலகில் துன்பத்தையும் துயரத்தையும் தவிர வேறு ஒன்றும் இல்லை. இங்கு நாம் இருப்பதும் அநித்தியம். இந்த அற்ப வாழ்வும் மோசம் நாசம் கம்பளி வேஷமாக இருக்கிறது. சே! இது யோக்கியர்கள் இருப்பதற்கே தகாத உலகம். கொஞ்சங் கொஞ்சமாய் ஆகாரத்தைக் குறைத்து தேகத்தை ஒடுக்கிக் கடைசியில் என் பிராணனை விட்டு விடுவதே நல்ல முடிவு. ஈசுவரனுடைய திருவடியையே சதா காலமும் நினைத்த வண்ணமிருப்பதே நமக்குப் பெருத்த தனம்; அதுவே பாக்கியம். அதுவே பேரானந்தம்; அதுவே யாவும். இந்த உலகில் யாதொரு பற்றுமில்லை. யாரை விட்டுப் போவதில் என்ன விசனம்? ஒருவரும் இல்லை. ஆனால் எனக்குக் கடைசியாக உதவி செய்த அந்த வஸந்தஸேனையை மாத்திரம் நான் ஒரு நாளும் மறந்ததில்லை. அவளுக்கு ஏதாவது ஒரு பதில் உதவி செய்து விட்டால் போதும்; என்னுடைய கடைசி விருப்பம் நிறைவேறிப் போம். அவளுக்கு எவ்விதமான உதவி செய்யப் போகிறேன் (திடுக்கிட்டு) இதென்ன ஆச்சரியம்! இந்தத் துணியின் கீழ் புஸ் என்று பெரு மூச்சு விடும் சத்தத்தைப் போலக் கேட்டதே! ஒருவேளை ஸர்ப்பம் கடித்து நான் இறந்தால் நல்லதுதான். (ஒரு கையை வெளியில் நீட்டுகிறான்) ஓகோ ஸர்ப்பத்தைப் போலத் தான் இருக்கிறது. ஸர்ப்பமல்ல! தந்தத்தினால் செய்யப்பட்டகையைப் போல் இருக்கிறதே! (வஸ்திரத்தை எடுத்து விட்டு) இதென்ன ஆச்சரியம்! ஒரு ஸ்திரீயின் அழகிய கரமல்லவோ தெரிகிறது! இது விநோதமாக இருக்கிறதே! (சருகுகளை விலக்குகிறான்) ஆகா! என்ன காந்தி! ஒரு பெண்மணி அல்லவோ படுத்துக் கொண்டிருக்கிறாள்! என்ன வஞ்சகமோ தெரியவில்லையே! எந்தப் பாதகன் இப்படிச் செய்தானோ தெரியவில்லையே. உயிர் இருக்கிறது. (நன்றாய்ப் பார்த்து) ஆகா! எனக்கு உதவி செய்த உத்தமியான வஸந்தஸேனையைப் போல் இருக்கிறது. என் மனதின் பொய்த் தோற்றமோ! சீ இல்லை! இல்லை! அந்த மாதுசிரோன் மணியே இவள்! இங்கு வந்த காரணம் என்ன? அதோ திரும்புகிறாள்? கண்ணைத் திறக்கிறாள்!
(தண்ணீர் வேண்டும் என்று சைகை செய்கிறாள்)
சந் : (தனக்குள்) சமீபத்தில் நீரோடை இருக்கிறது. ஜலத்தை எப்படி எடுத்துக் கொண்டு வருகிறது? திருவோடு கூட என்னிடத்தில் கிடையாது; இதோ மாமரம் இருக்கிறது. அதன் இலைகளைத் தொன்னையாகத் தைத்து அதில் எடுத்து வருகிறேன்.
(போய் ஜலம் கொணர்ந்து அருந்துவித்து ஈரத் துணியால் முகத்தைத் துடைத்து அதனால்