(தனக்குள்) சனியன் ஒழிந்தான்! இவ்விதமான துஷ்டர்களை அந்தக் கடவுள் ஏன் படைக்கிறானோ தெரியவில்லை! சந்நியாசி என்றால் இவனுக்கு எவ்வளவு கோபம் உண்டாகிறது! இவன் போகட்டும் என்று இதுவரையில் ஒரு மறைவில் இருந்து, இப்பொழுதே என்னுடைய காஷாய வஸ்திரத்தைக். கசக்கினேன். இவன் இனித் திரும்பி வர மாட்டான். வஸ்திரத்தை இந்த மரக்கிளையில் கட்டி உலர்த்துகிறேன். சே! குரங்குகள் இருக்கின்றன; கிழித்தாலும் கிழித்து விடும். கீழே தரையில் காய வைத்தால் மண் ஒட்டிக் கொள்ளும். என்ன செய்கிறது? அதோ இலைச் சருகுகள் முட்டாகக் குவிந்திருக்கின்றன. அதன் பேரில் காய வைக்கிறேன். (வஸந்தஸேனை கிடந்த இடத்தின் பேரில் துணியை விரித்து விட்டு அருகில் உட்காருகிறான்.
ஆகா! இந்த உலகத்தில் என்ன இருக்கிறது)
திருவருட்பா - தோடி
விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்து கிடந்தழுது
விம்முகின்ற குழவியினு மிகப்பெரிதுஞ் சிறியேன்
அளக்கறியாத் துயர்க்கடலில் அழுந்தி நெடுங்கால
மலைந்தலைந்து மெலிந்து துரும் பதனின் மிகத்துரும்பேன்.
கிளக்கறியாக் கொடுமையெலாம் கிளைத்த பழுமரத்தேன்
கொடுமதியேன் கடுமையினேன் கிறிபேசும் வெறியேன்
களக்கரியாப் புவியிடை நானேன் பிறந்தே னந்தோ!
கருணை நடத்தரசே! நின் கருத்தை யறியேனே.