வீர : (அஞ்சிப் பின் வாங்கி) சரி, சரி உனக்கு அச்சமாய் இருந்தால் நீ போய் விடு. இங்கே நிற்காதே.
தோழ : (தனக்குள் நான் இந்த நகரத்தில் இருந்தால், இந்தப் படுபாவி என் பேரில் இந்தக் குற்றத்தைச் சுமர்த்தி என்னைப் பல துன்பங்களுக்கு ஆளாக்குவான். நான் இந்த ஊரை விட்டுப் போய் பிரதாபனுடன் சேர்ந்து கொள்ளுகிறேன். (போய் விடுகிறான்)
வீர : அடே பத்மநாபா என்ன நீ கூடவா பயப்படுகிறாய்?
பத்ம : ஸ்வாமி! இது மிகவும் கொடிய விஷயம் அல்லவா?
வீர : நீயும் என்னைத்தூஷிக்க ஆரம்பித்தாயா? இதோ இந்த ஆபரணங்களை வெகுமதியாக எடுத்துக் கொள். நான் நன்றாய் அலங்காரம் செய்து கொண்டிருக்கையில் நீயும் எனக்குத் தகுந்த படி இருக்க வேண்டாமா? நேரமாகிறது, நீ வண்டியை ஓட்டிக் கொண்டு அரண்மனைக்குப் போ; நான் பின்னால் வருகிறேன்.
பத்ம : அப்படியே செய்கிறேன். (போய் விடுகிறான்)
வீர : (தனக்குள்) இந்த இரண்டு கழுதைகளையும் அரண்மனைக்குப் போனவுடன் ஒருவரும் அறியாமல் சிறைச்சாலையில் அடைத்து விடுகிறேன்; பிறகு இந்த இரகசியம் எப்படி வெளியில் வரப் போகிறது. இவள் உயிர் போய் விட்டதா அல்லது இன்னம் நன்றாய்க் கொல்ல வேண்டுமோ பார்க்கிறேன். சரி ஒழிந்துப் போய் விட்டாள்! சருகுகளை நன்றாய்ப் போட்டு மூடுகிறேன். நான் உடனே நியாயாதிபதியினிடம் போய் வஸந்தஸேனையின் ஆபரணங்களை அபகரிக்கும் பொருட்டு மாதவராயன் இவளைக் கொன்று விட்டதாகப் பிராது கொடுக்கிறேன்! நல்ல யோசனை நல்ல தந்திரம் மாதவராயனும் ஒழிந்து விடுவான் சரி போகிறேன். (போப் விடுகிறான்)
(ஈர வஸ்திரத்துடன் சந்தியாசி வருகிறான்.)