சிறுகதை - ஐ லவ் யூ, பூஜா! - ரவை
" ராஜா! நான் திருப்பித் திருப்பி கேட்கிறேன், நீயேன் பதில் சொல்லமாட்டேங்கிறே?"
" பூஜா! ஐ ஆம் சாரி! நீ என்ன கேட்டே?"
" இதானே வேண்டாங்கறது, தெரியாதமாதிரி நடிக்காதே!"
" ஓ.கே., ஓ.கே., கோவிச்சிக்காதே! நாமிருவரும் டாக்டரிடம் போய், நமக்கு கல்யாணமாகி பத்து வருஷமாகியும் இன்னும் ஏன் குழந்தை பிறக்கவில்லைனு 'செக் அப்' பண்ணணும், அவ்வளவுதானே, பண்ணிட்டா போச்சு!"
" ராஜா! நான் சீரியஸா கேட்கிறேன், நமக்கு பத்து வருஷமாகியும் குழந்தை பிறக்கவில்லையேன்னு உனக்கு வருத்தமாவே இல்லையா?"
" பூஜா! ஹானஸ்டா நானும் சொல்றேன், எனக்கு வருத்தமாயில்லை! காரணம், நீதான் எனக்கு குழந்தையா இருக்கியே, உன்னோட கொஞ்சறதும், விளையாடறதும், ஒரு குழந்தை தரக்கூடிய சுகத்தைவிட அதிகமானது, பிறந்த குழந்தைக்கு முத்தம் கொடுத்தால், அதுக்கு ஒண்ணும் புரியாது, ரெஸ்பான்ஸே கிடைக்காது, ஆனா வளர்ந்த குழந்தை பூஜாவுக்கு தந்தால்..........."
பேசிக்கொண்டே, ராஜா அவளருகில் வந்தான்.
பூஜா விலகி நின்றாள்.
" ராஜா! இப்படி ஏதாவது ரொமாண்டிக்கா பேசி என்னை திசை திருப்பி, நான் கேட்டதை மறக்கடிக்க முயற்சி செய்யாதே! இன்னிக்கி இப்பவே நாமிருவரும் கிளம்புகிறோம், டாக்டரை பார்க்கிறோம், டெஸ்ட் செய்துகொள்கிறோம், மேற்கொண்டு டாக்டர் சொல்படி நடப்போம், சரியா? கிளம்பு உடனே!"
ராஜா ஏற்கெனவே பூஜாவுக்கு தெரியாமல், டெஸ்ட் செய்துகொண்டாகிவிட்டது. அவனிடம் எந்தக் குறையுமில்லை. அப்படியென்றால்? பூஜாவிடம் குறை இருப்பதற்கு சந்தர்ப்பம் அதிகம் உள்ளது. பாவம், பூஜா! அவளுக்கு குறையுள்ளது தெரியவந்தால், அவளால் தாங்கிக்கொள்ளமுடியாது!
" ஓ.கே., பூஜா! இந்தமாதிரி விஷயத்துக்கு டாக்டர் கமலா செல்வராஜ்தான் எக்ஸ்பெர்ட்னு கேள்விப்பட்டிருக்கேன், நீயென்ன சொல்றே?"
" நானும் விசாரித்ததிலே, அவங்களைத்தான் சிபாரிசு பண்றாங்க......"
" அவங்க க்ளினிக்குக்கு உடனே போன் பண்ணி, அபாயிண்ட்மெண்ட் கேட்கிறேன்.........."
" போனெல்லாம் வேண்டாம், நேரே போய் க்யூவிலே காத்திருந்து பார்ப்போம், கிளம்பு!"
பூஜாவிடமிருந்து தப்புவது சற்று கடினந்தான் போலிருக்கே என யோசித்த ராஜா, வேறெப்படி தப்பிக்கலாம் என யோசித்தான்.
" ஒரு நிமிஷம், பூஜா! ஆபீஸ்க்கு போனிலே லீவு சொல்லிட்டு வரேன்............."