பிறந்து தம்பதியர் குழந்தைகளை பராமரிப்பதிலேயே தங்கள் நேரம் முழுவதையும் செலவழித்து விரைவிலேயே சலித்து அவர்களுக்கு வாழ்க்கை ருசிக்காது. அதே சமயம் சற்று தாமதமாக குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளும், குழந்தையே பிறக்காத தம்பதியரும், தங்கள் வாழ்வை நன்றாக தங்கள் இஷ்டம்போல் வாழ்ந்து இன்பத்தை அனுபவிக்கமுடியும்.
அதனால்தான், ஒப்பிடுதல் என்பது நம்மை தவறான முடிவுக்கு இழுத்துச் சென்றுவிடும். ப்ளீஸ்! அது வேண்டாமே!"
" பூஜா! இப்ப நீ சொல்லு!"
" அக்கா! ராஜா சாமர்த்தியமாக நீ கேட்ட கேள்வியை திசை திருப்பிவிட்டான். குழந்தைகளைப் பெற்ற தம்பதியருக்கு அந்தக் குழந்தைகளினால் கிடைக்கிற இன்பத்துக்கு, அன்புக்கு, வாத்ஸல்யத்துக்கு, ஈடு உண்டாக்கா? 'குழல் இனிது, யாழ் இனிது என்பர், தம் மக்கள், மழலைச் சொல் கேளாதவர்'னு குறள் எழுதிய வள்ளுவர் அனுபவித்துச் சொன்னார்..........."
" சாரி, குறுக்கீடுக்கு மன்னிக்கணும், வள்ளுவருக்கும் வாசுகிக்கும் குழந்தை பிறந்ததாக நான் கேள்விப்படலே.........."
" ராஜா! குதர்க்கமா பேசாதே! சரி, அனுபவித்துச் சொல்லாவிட்டாலும், அழகாக, அனுபவித்ததுபோல் சொல்லியிருக்கிறார், இல்லையா? வாழ்வில் மனிதன் அனுபவிக்கிற எல்லா இன்பங்களிலேயும் சிறப்பானது, குழந்தைப்பேறு!
அதுதவிர, தம்பதிகளுக்கிடையே மனஸ்தாபம் ஏற்பட்டால், பெற்ற குழந்தைகளின் நலனை உத்தேசித்து, விட்டுக்கொடுத்து, சமரசம் செய்துகொண்டு, விரைவிலேயே மனஸ்தாபத்தை மறந்துவிடுவார்கள். குழந்தையே பிறக்காத தம்பதியோ, விவாகரத்து பற்றி சிந்திப்பார்கள். குழந்தை பிறக்காமலிருப்பதற்கு ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லுவார்கள். அக்கா! உன்னை நேரடியாகவே கேட்கிறேன், நீ இரண்டு குழந்தைகளின் தாய்! தாய்மையே உனக்கொரு பெருமை! உன் குழந்தைகளின் ஸ்பரிசம், அந்த வாசனை, அந்த மழலை, உன் சேலைத் தலைப்பை பிடித்துக்கொண்டு நாள் முழுவதும் உன்னை விட்டுப் பிரியாமலிருக்க அந்தப் பாசம், எனக்கு கிடைக்குமா, அக்கா?............"
பூஜா மனம் உடைந்து விக்கி விக்கி அழத் தொடங்கியதும், ராஜா அவளை அணைத்துக்கொண்டு முதுகில் தடவிக் கொடுத்து சமாதானப்படுத்தினான். பூஜாவின் அக்காவும் தங்கையின் வேதனையை கண்டு பொறுக்கமுடியாமல்,அழுதவாறே, "இறைவா! என் தங்கையை அளவுக்கு மீறி சோதிக்காதே! அவள் தாங்கமாட்டாள். சீக்கிரமே அவள் குறையை தீர்த்துவை!" என பிரார்த்தித்தாள்.
கிணறு வெட்ட, பூதம் புறப்பட்ட கதையாகிவிட்டதே என ராஜா மனதிற்குள் விசனித்தான்.