" ராஜா! அவசரப்படக்கூடாது, இந்த விஷயத்திலே! நல்ல எக்ஸ்பெர்ட் டாக்டராலேதான், கரெக்ட்டா டிலே ஆவதற்கான காரணத்தை கண்டுபிடித்து, சரியான மருந்து, மாத்திரை, வழியை சொல்லமுடியும். அதனாலே, இந்த டாக்டரையே, அவங்களை எப்ப பார்க்கமுடியறதோ, அதுவரையிலும் காத்திருந்து பார்ப்போம், ஒரு வாரம் டிலே ஆனாலும் பரவாயில்லே......"
சந்தோஷத்திலே ராஜா ஸ்கூட்டரை வேகமாக ஓட்டினான். பயத்தில், பூஜா அவனை இறுக கட்டிக்கொண்டு, " பார்த்து ஓட்டு, இத்தனை வேகம் வேண்டாம்" என எச்சரித்தாள்.
க்ளினிக் வந்ததும், ராஜா உஷாராக " பூஜா! நான் ஸ்கூட்டரை பார்க்கிங் பண்ணிட்டுவர லேட்டாகும். அதற்குள்ளே, நீ க்யூவிலே இடம் பிடி! டாக்டரை பார்க்க எத்தனை நேரமாகும்னு தெரிந்து வைச்சுக்க....!" என அவளை இறக்கிவிட்டான்.
அவளும் உற்சாகமாக உள்ளே சென்றாள். அவள் மனதில் எத்தனையோ குழப்பங்கள்!
டாக்டர் இறுதியாக என்ன சொல்லப் போகிறாரோ!
இருவரில் யாராவது ஒருவருக்கு குறையா, அல்லது இருவருக்குமேயா.....குணப்படுத்தமுடியுமா, முடியாதா, .......குழந்தை பிறக்க எத்தனை காலம் ஆகும்......?
பூஜா ஒரு விஷயத்தில் தீர்மானமாக இருந்தாள், குறை தனக்கில்லை, ராஜாவுக்குத்தான் என்று தெரியவந்தால், அதை மனதார ஏற்றுக்கொண்டு, அவனிடம் இனி இந்த விஷயத்தைப் பற்றி பேசக்கூடாது! அவன் மனம் ஒடிந்துபோய்விடுவான். அவன் தன்னிடம் காட்டுகிற அபரிமிதமான அன்புக்கு அதுதான், தான் செய்யவேண்டிய மரியாதை!
ஒருவேளை, குறை ராஜாவிடம் இல்லை, தன்னிடம்தான் என்று தெரியவந்தால், தானே முன்வந்து அவனுக்கு இரண்டாம் கல்யாணம் செய்துவைத்து, அவர்களுக்கு பிறக்கும் குழந்தையை தன் குழந்தையாக வளர்த்து மகிழவேண்டும்! இந்த முடிவில் யார் தடுத்தாலும் மாற்றமே கிடையாது!
மூன்றாவதாக, இருவருக்குமே குறை உள்ளதாக, தெரிந்தால், தாமதப்படுத்தாமல் ஒரு அனாதை குழந்தையை எடுத்து வளர்க்கவேண்டியதுதான்!
நான்காவதாக, மருந்து மாத்திரை சாப்பிட்டால், தான் விரைவிலேயே தாயாகமுடியும் என்ற இனிப்பான செய்தி கிடைத்தால், திருப்பதி பெருமாளை நேரில் தரிசித்து நன்றி கூறவேண்டும்.
சிந்தனையில் ஆழ்ந்திருந்த பூஜாவை, ரிசப்ஷனில் தடுத்து நிறுத்தி, " யாரைப் பார்க்கணும்?" என்ற குரல்தான் மீட்டுவந்தது.