இருந்தாங்கன்னு தெரியலே, குறைஞ்சது இருபத்தைஞ்சு பேர் சிக்கியிருப்பாங்க இல்லையா, அத்தினி பேரையும் உடனடியா வைத்தியம் பார்த்து, உயிர் பிழைக்க வைக்கிறது முக்கியமா? உனக்கும் எனக்கும் தகவல் சொல்றது முக்கியமா? பொறுமையா இருப்போம்! நல்லது நடக்கும்னு நம்புவோம்!"
" அண்ணே! இதோ பக்கத்திலே இருக்கிற, காளி கோவிலுக்குப் போய், கடவுளை வேண்டிக்கிட்டு வருவோம், வாங்க!"
இருவரும் கோவிலுக்குள் நுழைந்தபோது, மழைக்காக அங்கே ஒதுங்கியிருந்தவர்களின் கூட்டம் நெரிசலாயிருந்தது!
அந்த கும்பலிலும் ஆங்காங்கே மழையின் கடுமை பற்றியும், இடிந்த வீடுகளைப் பற்றியும், மழையுடன் புயலும் சேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தையும் பரிமாறிக் கொண்டிருந்தனர்.
கேசவனும் மூக்கையாவும் நெரிசலில் நீந்தி உள்ளே நுழைந்து, தெய்வ சந்நிதானத்தில், கண்ணீருடன் கரங்கூப்பி, தங்கள் மக்களை காப்பாற்றித்தர காளியம்மனை மனதார பிரார்த்தித்தனர்.
" நல்லதே நடக்கும்! கவலைப்படாதீங்க!"
யாரோ வேறு எவரிடமோ இதை சொல்லியது, இருவருக்கும் அசரீரி வாக்காகப் பட்டது.
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, கதறி அழுதனர்.
அருகில் நின்றிருந்தவர்களால் சும்மா இருக்கமுடியுமா?
" பாவம்டா! பாலக்கரை பழைய கட்டிடம் இடிஞ்சு உள்ளேயிருந்து இடிபாட்டிலே சிக்கிய முப்பது பேரிலே இவங்க உறவுக்காரங்களும் மாட்டிக்கிட்டாங்களோ, என்னவோ!"
" நான் அந்தக் கட்டிடத்தை ஓடிப்போய் பார்த்தேனே, கல்லும் மண்ணும் மழையிலே கலந்து சேறு சகதியாயிருக்கிறதாலே, தீயணைப்புக் காரங்களாலே, உள்ளேயே போக முடியலே! க்ரேன் வந்தபிறகு தான், கல்லையும் மண்ணையும் அகற்ற முடிஞ்சுது, அப்பவே கட்டிடம் இடிஞ்சு நாலு மணி நேரம் ஆயிடுத்தாம்!"
" அப்படின்னா, க்ரேன் மூலமா இடிபாடுகளை வெளியே தூக்கிப் போட, இன்னும் ஒரு நாலுமணி நேரம் ஆயிருக்குமே......"
" சந்தேகமில்லாமல், பத்து மணி நேரத்துக்குப் பிறகுதான், உள்ளேயிருந்தவர்களை வெளியே எடுத்து மருத்துவ மனைக்கு தூக்கிக்கிட்டு போனாங்க, ஆம்புலன்ஸ் நாலைந்துதான் இருந்ததாலே, ரெண்டு மூணு ட்ரிப்பா தூக்கினாங்க....."
" முதல் ட்ரிப்பிலே போனவங்க பிழைச்சுக்க சான்ஸ் இருக்கு! அடுத்தடுத்த ட்ரிப்பிலே போனவங்க பாவம்! என்ன ஆனாங்களோ?"