குசும்புதானே?"
" என்ன சொல்றீங்கய்யா? புரியலே!"
" உயிருக்குப் போராடினா, உடனே அவங்க செத்துப் போயிடுவாங்களா? பிழைக்க மாட்டாங்களா? அப்படி பிழைக்கிறவங்க ரெண்டு மூணு பேரா இருந்தால்கூட, அந்த மூணு பேரிலே உன் மனைவியும் மகனும் இருக்கலாமே? சரி, அதெல்லாம் விடு! கட்டிட இடிபாட்டிலே சிக்கியவங்களிலே, யார் யார் இருக்காங்கன்னு நிச்சயமா சொல்லமுடியுமா? உன் மனைவியும் மகனும் அந்த நேரத்திலே தற்செயலா வெளியிலே கடைக்கோ, தெரிந்தவங்க வீட்டுக்கோ, ஏன் கோவிலுக்கோ போயிருக்கலாமே, அப்படியெல்லாம் சிந்திக்கவிடாமல், உன் மனசு உன்னை தப்பா நினைக்க வைப்பது உண்மையா இல்லையா? சொல்லுப்பா!"
கேசவனுக்கு அப்போதுதான் பொறி தட்டியது!
ஆம், கட்டிடம் இடிந்து விழுந்த நேரத்தில், ரோசாவும் ரத்தினமும் கோவிலுக்குப் போயிருக்கலாமே, ரோசாவுக்கு தினமும் காலையில் கோவிலுக்குப் போகிற பழக்கம் உண்டே!
" தம்பீ! விபத்தைப்பற்றி கேள்விப்பட்டதும், நீ முதல்லே உன் வீட்டுக்குப்போய் பார்த்தியா, இல்லே, நேரே இங்கே வந்துட்டியா? யோசனை பண்ணி சொல்லு!"
"ஐயா! விஷயத்தை சொன்னவங்க, அடிபட்ட அத்தினி பேரையும் இங்கே அழைத்து வந்துட்டதா சொன்னாங்க, அதனாலே நேரே இங்கே வந்து காத்துக் கிடக்கிறேன்......."
" தம்பீ! மழை நின்றுவிட்டது. இங்கிருந்து உன் வீட்டுக்குப் போய்வர, அதிக நேரமாகாது இல்லையா? ஒண்ணு செய்! இந்த பிச்சைக்காரன் சொல்றதைக் கேள்! காளியாத்தா உன்னை கைவிடமாட்டா! உடனே வீட்டுக்கு ஓடிப்போய் அக்கம் பக்கத்திலே எங்கேயாவது உன் மனைவியும் மகனும் இருக்காங்களான்னு தேடு, விசாரி! நல்ல செய்தி கிடைக்கும்னு நம்பு! துணிந்து நில்லு! பயப்படாதே! பயந்து என்ன பயன்? இங்கே கேட்ல நிக்கிறதனாலே உள்ளே இருக்கிறவங்க உயிரை காப்பாத்த முடியுமா? அந்த வேலையை டாக்டருங்க பார்த்துப்பாங்க! உனக்குத் தெரிந்தவங்க யாராவது இந்தக் கூட்டத்திலே இருந்தால், அவங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு உடனே ஓடு, வீட்டுக்கு! நான் சொல்றேன், நம்பு! உனக்கு அங்கே நல்ல செய்தி கிடைக்கும், உம்!"
அசரீரி வாக்காக முதியவரின் சொல்லை ஏற்று, மூக்கையாவிடம் தெரிவித்துவிட்டு, கேசவன் ஓடினான், வீட்டுக்கு!
காளியாத்தா அவனை கைவிடவில்லை!
மூவருமாக மருத்துவ மனைக்கு ஓடிவந்து, முதியவரை தேடியபோது, அங்கேயும் சரி, கோவில் வாசலில் இருந்த பிச்சைக்காரக் கும்பலிலும் சரி, அந்த முதியவரை காணவில்லை!