பார்த்துக் கொண்டிருந்தான்!
கேசவனின் மனம், வழக்கம்போல, சும்மா இருக்க முடியாமல், மனைவி ரோசா தன்னுடன் வாழ்வில் இணைந்த அந்த நாட்களை எண்ணிப் பார்த்தது!
கேசவனுக்கு படிப்பில் அதிக நாட்டம் இல்லாத காரணத்தால், அவன் படிப்பு பத்தாவதுடன் நின்றுவிட்டது. பிழைப்புக்கு என்ன செய்வது என யோசித்தபோது, ஏதாவது ஒரு திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும் என தீர்மானித்து, கார் ஓட்டும் பயிற்சி மேற்கொண்டு அதில் தேறி, நடேசன் செட்டியார் வீட்டில் கார் டிரைவராக சேர்ந்தான்.
செட்டியார் ஒரு துணிக்கடை முதலாளி! அவரை வீட்டிலிருந்து கடைக்கும் அதுபோல கடையிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்வதோடு, அவருடைய மூன்று பெண்களை பள்ளிக்கு கொண்டுவிட்டு திரும்ப அழைத்து வருவதும், கேசவனின் முழுநேர வேலை.
செட்டியாருக்கு ஒரு மனக்குறை! தனக்கு ஒரு மகன் பிறக்கவில்லையே என்பது!
கேசவனை அவருக்கு பிடித்துப் போய்விட்டதால், அவனை தன் மகனாகவே கருதி அன்பு செலுத்தியதோடு, அவனுக்கும் ரோசாவுக்கும் திருமணம் செய்துவைத்து வீடு பார்த்து கேசவனின் வாழ்வை அமைத்துக் கொடுத்தார்.
இரண்டு ஆண்டுகள் முன்பு, கேசவனுக்கு மகன் பிறந்தபோது, செட்டியார்தான் குழந்தைக்கு 'ரத்தினம்' எனப் பெயர் வைத்தது!
" கேசவா! இப்படியே என்னிடம் டிரைவராக இருந்து, நான் தருகிற ஐயாயிரம் ரூபாயிலே எப்படிடா காலம் முழுவதும் வாழ்க்கை நடத்துவே? நான் சொல்றதைக் கேள்!
இந்த ஊர் சின்ன டவுன்! இந்த ஊரைவிட சென்னை நகரத்திலே, உனக்கு வாய்ப்புகள் அதிகம்! ஒண்ணு செய்!
குடும்பத்தோடு சென்னைக்கு சென்று, ஏதாவது ஒரு பழைய வீட்டில் குறைந்த வாடகையில் வாழ்ந்துகொண்டு, ஆட்டோ ஓட்டிப் பிழைத்துக்கொள்! நான் உனக்கு ஒரு ஆட்டோ வாங்கித் தருகிறேன்.
நாள் முழுவதும் உழைத்து சம்பாதித்தால், நாள் ஒன்றுக்கு பெட்ரோல் செலவு போக, ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். அந்தப் பணத்தில், சிறுகச் சிறுக சேமித்து, ஒரு பழைய கார் வாங்கி, அதை டாக்சியாக ஓட்டி நிறைய சம்பாதித்து ரதியை நல்லா வைச்சிக்கிறதோடு, ரத்தினத்தையும் நிறைய படிக்க வைக்கலாம். அவனும் பி.ஏ., எம்.ஏ.ன்னு படிச்சு அமெரிக்கா போய் மேலே படிச்சு பெரிய மனுசனாகி உங்களை ஓகோன்னு வாழவைப்பான். உன் உழைப்புக்கும், நல்ல குணத்துக்கும் கடவுள் உன்னை கைவிடமாட்டார்" என சொல்லியதோடு நிற்காமல், சொன்னபடியும் செய்தார்.