"அப்படின்னு அவள் சொன்னாளா?"
"அவள் சொன்னால்தானா? என்னால் கண்டுபிடித்துக் கொள்ள முடியாதா?"
"நீ சினிமாவில் வர்ற மாதிரி உணர்ச்சிகளை எல்லாம் வெளியில் காட்டனும்னு நினைக்கக்கூடாது."
"நான் அப்படியெல்லாம் நினைக்கலை வினு. என்னால் புரிஞ்சு கொள்ள முடியுது."
அவன் குரலின் தன்மையை வைத்து அவளால் உணர முடிந்தது.
நான் மகிழ்ச்சியாக இருக்கிறேனா? அது மட்டும் போதும் என்றில்லாமல் அவளும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறானே. அது பெரிய விசயமில்லையா?
"அவள் ஒரு மனைவியாக என்னிடம் நடந்து கொள்ளும் போதெல்லாம் கடமையுணர்ச்சிதான் தெரிகிறதே தவிர, அதில் கொஞ்சம் கூட காதலில்லை."
அவன் வருத்தமுடன் கூறினான்.
"அவகிட்ட பேசினாயா?"
"எங்கே பேசறது? அவ என்னைக் கண்டாலே ஓடிப் போயிடுறா."
"என்னடா இப்பப் போய் சொல்றே? நான் இன்னிக்கு ஊருக்குப் போறேன்னு தெரியும்தானே? முன்னாடியே சொல்லியிருந்தால் நான் அவகிட்ட பேசியிருப்பேன்."
"இதை எப்படி சொல்றதுன்னுதான் பேசாமல் இருந்துட்டேன்."
"சரி. சரி. அவ நல்லப் பொண்ணாத்தான் தெரியிறா? நான் பேசிப் பார்க்கிறேன். இல்லைன்னா என்னோட பயணத்தை தள்ளி வைத்துக் கொள்கிறேன்."
"அப்படி எல்லாம் பண்ணிடாதே."
"ஒன்னும் தப்பாயிடாது. வா போகலாம்."
இருவரும் கிளம்பினர்.
கயல்விழியின் தந்தை அவளைக் காண வந்திருந்தார்.
மாமனாரும், மாமியாரும் அவரை மரியாதையுடன் நடத்தும் விதத்தைக் கண்டு அவள் பூரித்துப் போனாள். அவளுடைய தந்தை மகளைக் கண்ட உடனே அவள் வாழும் வாழ்க்கையைப் புரிந்து கொண்டார். மகிழ்ச்சியுடனே விடைபெற்றுக் கிளம்பினார்.
போவதற்கு முன்பு மகளிடம் தனிமையில் பேசியவர்
"அம்மாடி. உன்னைப் பார்க்கும் போதே அவங்க உன்னை எத்தனை மகிழ்ச்சியா வச்சிருக்காங்கன்னு தெரியுது. இருந்தாலும் உன் முகம் நல்லாயில்லை. உன் சித்தி உன்கிட்ட ஏதோ ஓதிக்கிட்டேயிருந்தாள். அவ உனக்கு என்னிக்குமே நல்லது நினைத்தது இல்லை. இப்ப மட்டும் உன் நல்லதிற்கா சொல்லியிருக்கப் போகிறாள்? அவள் எதை சொல்லியிருந்தாலும் நீ அதைத் தூக்கிக்