கண்ணாடியைப் பார்க்கும் போதெல்லாம் அந்தத் தருணம் நினைவுக்கு வந்து வலியைக் கொடுக்கும்னு நினைச்சேன். ஏன்னா அடிக்கடி நீ வேதனையோட அந்த வடுவை வருடுறதை நான் பார்த்திருக்கிறேன். நான் முத்தம் கொடுத்தால் உனக்கு அந்த வடுவை பார்க்கும் போதெல்லாம் என்னோட முத்தம் தான் நினைவுக்கு வரும்னுதான் நான் அப்படி செய்தேன்."
அவள் கண்கள் கலங்க கணவனைக் கட்டிக் கொண்டாள். அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
முதன் முதலில் கடமைக்காக இல்லாமல் ஒரு காதல் மனைவியாக அவள் நடந்து கொண்டதில் அவன் ஆனந்தத்தில் திளைத்தான். அவன் சொன்னதும் சரிதானே? முன்பெல்லாம் அவள் அந்த வடுவைப் பார்க்கும் போதெல்லாம் அவள் காயம் பட்ட தினம் நடந்ததுதானே நினைவுக்கு வந்தது. கணவன் முத்தமிட ஆரம்பித்த பிறகு அது மறைந்து கணவன் தன்னை கேலி செய்கிறானோ? என்றுதானே தோன்றியது.
"ஓ. மை காட். நாம இப்படியே நிற்கிறது சரியில்லை. அப்புறம் வினோதினியை சரியான நேரத்திற்கு வழியனுப்ப செல்ல முடியாது. ராத்திரி வந்து மிச்சத்தை வச்சுக்கலாம்." என்று அவன் சொன்ன போது அவள் முகம் சிவந்தது.
"இப்படி எல்லாம் என் முன்னாடி முகம் சிவக்க நிற்கக்கூடாது. மனிதனோட உணர்ச்சிகளோட விளையாடறதே உனக்குப் பொழைப்பா போச்சு."
என்றவன் வினோதினியைப் பற்றிக் கூறினான்.
வினோதினி சிறு வயதில் இருந்தே தந்தையைப் போன்று நாட்டிற்காக உழைக்க வேண்டும் என்ற ஆசை கொண்டவள். உயரம் குறைவாக இருப்பதால் அவளால் இராணுவத்தில் அவள் ஆசைப்பட்டபடி சேர முடியவில்லை.
ஆனாலும் அவள் மனம் தளராமல் ஆசிரியைப் பயிற்சி மேற்கொண்டாள். இராணுவத்தில் வேலை பார்க்கும் சுந்தரத்தையே மணந்து கொண்டாள். இப்போது அவளுக்கு அங்கே ஆசிரியை வேலை கிடைத்திருக்கிறது. அதற்குத்தான் கிளம்பிக் கொண்டிருக்கிறாள்.
அவன் வினோதினியைப் பற்றிக் கூறியதும் அவள் மீதான மதிப்பு அதிகமானது. அவள் பேசியதற்கு வேறு யாராவது இருந்திருந்தால் அவளை அறையாமல் விட்டிருக்கமாட்டார்கள். ஆனால் அவள் புன்னகையுடனே அவள் மனதை நெருங்கி அவள் பிரச்சினையை தீர்த்துவிட்டாள்.
"கிளம்ப மனமே வர மாட்டேங்குது." என்று சலித்தவாறே அவள் அருகில் வந்த ரவிவர்மன் அவள் முகத்தில் இருந்த அந்த வடுவில் முத்தமிட்டபோது எப்போதும் போல் அல்லாமல் சிலிர்த்துப் போனாள். அதில் அவள் கணவனின் காதலை உணர்ந்து கொண்டாள். இனி அவள் கடமைக்காக மனைவியாக வாழ மாட்டாள். காதல் மனைவியாக அவன் உணர்வுகளை புரிந்து கொள்வாள்.
இருவரும் நாட்டிற்காக சேவை செய்யக் கிளம்பும் தங்கள் தோழியை வழியனுப்பக் கிளம்பினார்கள்.
***** நிறைவு பெற்றது. *****