இருந்த கண்ணாடியின் அருகில் அழைத்துச் சென்றான்.
"நீயே பாரு. உனக்கு என்ன குறை?"
கண்ணாடியில் தன்னைக் கண்ட கயல்விழி ஆனந்த அதிர்ச்சிக்குள்ளானாள்.
தான்தானா அது என்ற சந்தேகமே வந்துவிட்டது. ஒல்லியான தேகத்துடன் வெடவெடவென்று இருந்த கயல்விழி காணாமல் போயிருந்தாள். மனதில் கவலை இல்லாமல், அத்துடன் சுமித்ராவின் கவனிப்பும் சேர்ந்ததில் அவள் உடல் மெருகேறியிருந்தது.
அத்துடன் அவன் உயரத்திற்கேற்றவாறு அவளும் வளர்த்திதான்.
அவனோடு இணைந்து நின்ற தோற்றம் அத்தனை பாந்தமாய் இருந்தது. இருவருக்கும் தோற்றப்பொருத்தம் அப்படி பொருந்தியிருந்தது.
அவள் கண்களில் ஆச்சர்யத்தைக் கண்டவன் அவள் தலையை செல்லமாய் குலுக்கினான்.
"இங்கே கிடந்து உன்னை ஆட்டிப்படைக்கிறது என்னம்மா? என்கிட்டே இப்பவே வெளிப்படையா சொல்லிவிடு. நம்மகிட்ட ரொம்ப நேரம் இல்லை. வினோவை வழியனுப்பப் போகனும்."
திருமணமான உடன் அவன் ஒதுங்கியிருந்ததும், அவளுக்கு தேனிலவின் போது செய்த மருத்துவப் பரிசோதனைக்கும் என்ன காரணம்? அவள் தன் சந்தேகத்தைக் கேட்டாள்.
"அதுவா? அம்மா நீ கொஞ்ச நாட்கள் முன்புதான் தற்கொலை முயற்சி செய்தேன்னு சொன்னாங்க. அப்ப நீ சாப்பிட்ட விசம் உன்னை எந்தளவிற்குப் பாதிச்சிருக்குமோன்னு பயந்தாங்க. இங்கே மருத்துவப் பரிசோதனைன்னு போய் தெரிஞ்சவங்க யார் கண்ணிலாவது மாட்டிவிட்டால் தேவையில்லாத கதை கட்டிவிடுவாங்க. அதுதான் அங்கே செஞ்சது. அதுவும் அம்மாவின் கவலையைப் போக்கத்தான். உன் உடம்பு தேறட்டும். அதன் பிறகு எல்லாத்தையும் பார்த்துக்கலாம்னுதான் நான் முதலில் ஒதுங்கியிருந்தேன். ஆனால் அதுவே உனக்குப் பிரச்சினையாக இருந்திருக்கும்னு நான் நினைக்கலை. "
"உங்களுக்கு முன்பே என்னைத் தெரியுமா?"
"சின்ன வயதில் பார்த்திருக்கலாம். எனக்கு நினைவில்லை. ஆனால் அம்மாவுக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும். அவங்க உன்னைப் பத்திப் பேசும்போது அவங்க பிரியத்தை தெரிஞ்சுக்கிட்டேன். அவங்களுக்குப் பிடிச்ச பெண்ணை நான் கல்யாணம் செய்துகிட்டால் நம்ம எல்லோருடைய வாழ்க்கையும் நல்லாருக்கும்னு நினைச்சேன்."
"அப்புறம் நீங்க இந்த தழும்பின் மீதே முத்தமிடும் போது நீங்க என்னை கேலி செய்யறீங்களோன்னு..."
அவள் இழுத்தாள்.
"உனக்கு அந்தத் தழும்பு எப்படி ஏற்பட்டதுன்னு எனக்குத் தெரியாதுதான். ஆனாலும் உனக்கு