தலைமை ஆசிரியர் எச்சரித்தபிறகே, அவன் அட்டகாசம் குறைந்தது.
எழிலரசி நிம்மதியாக பரீட்சை எழுதி, பள்ளியிலேயே அதிக மதிப்பெண் பெற்று, பத்தாவது தேறினாள்.
எல்லோரும் அவளை 'எந்தக் காலேஜிலே சேரப்போறேடீ?' என கேட்டனர். அவள் தலைகுனிந்து கண்ணீர் உகுப்பாள்.
அவள், தந்தையை இழந்து, தாயுடன் வாழ்கிற ஏழைப்பெண்! வேறு ஊருக்குச் சென்று, படிப்புக்கும் தங்குவதற்கும் பணம் கட்டி, காலேஜில் படிக்க அவளால் முடியுமா?
கல்பனா மேற்படிப்புக்காக தன் ஊரைவிட்டு வந்தபோது, எழிலரசியை பார்த்ததுதான், இறுதி! பிறகு அவளை பார்க்கவேயில்லை!
எழிலரசி உள்ளூரிலேயே தட்டெழுத்தும் சுருக்கெழுத்தும் கற்றுக்கொண்டு முனிசிபல் ஆபீஸில் சுருக்கெழுத்தாளராக வேலையில் சேர்ந்து தாயுடன் வாழ்ந்து கொண்டிருப்பாள்.
ஏதோ சலசலப்பு கேட்கவே, கனவுலகிலிருந்து விடுபட்டு கல்பனா தலை நிமிர்ந்தாள்.
எதிரிலிருந்த அந்தப் பெண் எழுந்து டாய்லெட்டுக்கு போனாள். எழுந்த வேகத்தில், முகத்திரை முழுவதும் விலகி, அவள் முகம் தெளிவாக தெரிந்தது.
கல்பனா உற்றுப் பார்த்து ஊர்ஜிதப் படுத்திக் கொண்டாள், அவள் எழிலரசியேதான்!
அன்றிருந்த அழகு அழிந்துவிட்டாலும், அடக்கம் அவளை கைவிடவில்லை!
அவளுக்கா இந்த கதி? இறைவா! உனக்கு இரக்கமே கிடையாதா? ஏழைகளை ஏன் இப்படி மேன்மேலும் சோதிக்கிறாய்? அவளுக்கேன் இந்த தீக்காயங்கள்!
அவளைப் பார்க்க, நான், நீ, என்று போட்டி போட்ட காலம் போய், முகத்தைப் பார்த்தவுடன் அருவருப்பில் திருப்பிக் கொள்ளும்படியாக ஏன் செய்துவிட்டாய்?
நிச்சயமாக, எழிலரசிக்கு தன்னை அடையாளம் தெரிந்திருக்கும், ஏனெனில் அவளுடன் நெருங்கிப்பழகிய ஒரே தோழி தான் மட்டுமே! அதனால்தான், தலைமை ஆசிரியரிடம் புகார் செய்ய, தன்னையும் அழைத்துச் சென்றாள்.
திரும்ப இருக்கைக்கு வரட்டும், அவளையே கேட்டுவிடுவோம்!
திரும்பி வந்து இருக்கையில் அமரும்போது, அவள் கல்பனாவைப் பார்த்து புன்முறுவல் செய்தாள்.
அந்தப் புன்னகை, பொதுவாக, எவருமே ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் கண்ணுக்கு கண் பார்க்கும்போது, செய்வதுதான்! அது ஒன்றும் பெரிய ஆதாரமில்லை.
இருந்தாலும், தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளமுடியாமல், கல்பனா அவளிடம், " வணக்கங்க! நீங்க .....எழிலரசி தானே? கூறைநாட்டிலே பள்ளிக்கூடம் படித்தவங்கதானே? என்னை ஞாபகம்