இருக்கா, கல்பனா? தினமும் நீங்க முதலில் எங்க வீட்டுக்கு வந்து, பிறகு நாம சேர்ந்துதானே பள்ளிக்கூடம் போவோம்........"
கல்பனா மூச்சு விடாமல் பேசப் பேச, அந்தப் பெண் கலங்கி, கல்பனாவின் கைகளை பிடித்துக்கொண்டு, கண்ணீர் விட்டாள்.
" அழாதே, எழில்! நான் உன்னை எதுவும் கேட்டு தர்ம சங்கடப் படுத்தமாட்டேன். நடந்தவை நடந்தவைகளாகவே மறக்கப்பட்டு மடியட்டும். பாரதி சொன்னதுபோல, 'இன்று புதிதாய் பிறந்தோம்' என பழகுவோம்......" என அவளுக்கு தைரியம் சொல்லிக்கொண்டே, கல்பனா உடைந்து போனாள்.
அக்கம்பக்கத்தில் இதர பயணிகள் இருப்பதை நினைவில் வைத்து, அத்துடன் பேச்சை நிறுத்திக் கொண்டனர்.
எழிலின் டிக்கட்டை வாங்கிப் பார்த்தாள், கல்பனா! அட! அவளும் சென்னைக்குத்தான் வருகிறாள்.
நல்லதாகப் போச்சு! ரயிலைவிட்டு இறங்கியதும், மேற்கொண்டு பேசிக்கொள்ளலாம் என முடிவு செய்து, இருவரும் மௌனமாய் பயணித்தனர்.
ஆனால், இருவருமே நினைத்து நினைத்து குமுறினர்.
" இறைவா! எழில் என்ன பாவம் செய்தாள்? அவளுக்கேன் இந்த கொடூர தண்டனை? ஏழையாகப் பிறந்ததா, தந்தையின்றி தாயுடன் மட்டும் வாழ்ந்ததா? அபலைகளை ஆதரித்து ஆபத்திலிருந்து காப்பாற்ற வேண்டிய நீ, இப்படி அவளை அலங்கோலப் படுத்தியுள்ளது என்ன நியாயம்? இனி நான் உன்னை வணங்கப் போவதில்லை! நீ வரவர தீயவர்களை ஆதரித்து நல்லவர்களை நசுக்குகிறாய்!
நான் சொல்வது தவறு என்றால், இந்த நாட்டில் எத்தனை 'நிர்பயா'க்கள்! எத்தனை பெண்களை கடத்திப்போய் கற்பழித்து தீயில் கொளுத்திவிட்டு தப்பித்துக் கொள்கிறார்கள்! ஆயிரம் கோடிக் கணக்கில் வங்கிகளிடமிருந்து கடன்வாங்கிப் பின் திருப்பித் தராமல், வெளிநாடு சென்று வருஷக் கணக்கில் பிடிபடாமல் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் ஏழை விவசாயி ஆயிரக்கணக்கில் வாங்கிய கடனை திருப்பித் தரமுடியாதபோது, வங்கி அதிகாரிகளால் மிரட்டப்பட்டு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறான்! இதையெல்லாம் நீ பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாய்! உன் அனுமதியின்றி உலகில் ஒரு அணுகூட அசையாதே, எப்படி இமாலயக் கொடுமைகள் தொடர்ந்து நடக்கின்றன?
உள்ளம் வெதும்பி, மனம் நொந்து, கண்களை மூடியவள் அப்படியே உறங்கிவிட்டாள்!
ஆனால், எழில் உறங்கவில்லை!