அவளுக்கு நேர்ந்தது, தீ விபத்தல்ல, கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டு தீயிலிட்டு பொசுக்கப்பட்டவளல்ல, பின்?
அவள் அழகில் கிறங்கி மாதக் கணக்கில் பின் தொடர்ந்து வந்து, இம்சைப்படுத்தி, காதலிக்க கட்டாயப் படுத்தப்பட்டு, அவள் உறுதியாக மறுத்ததும், தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் அவள் முகத்தில் ஆசிட் வீசி அவள் வாழ்வை நாசப்படுத்திவிட்டான் அந்த கயவன்!
தனக்கு கிடைக்காத எழில் எவருக்குமே கிடைக்க கூடாது எனும் வெறி!
அவள் முகத்தை மட்டுமல்ல, வாழ்வையே சிதைத்துவிட்டான், அந்தப் பாவி!
ஆம், அவள், முகத்தில் ஆசிட் வீசப்பட்டு, மருத்துவ மனையில், கண் திறக்கமுடியாமல், வாய் பேசமுடியாமல், தவிப்பதை, அவளைப் பெற்ற தாயால் தாங்கிக் கொள்ள முடியுமா?
இது போதாதென, ஊராரின் அவதூறும் சேர்ந்துகொண்டது!
" உனக்கு தெரியுமோ? அந்தப் பொண்ணு முகத்திலே ஆசிட் வீசினவனோட, அந்தப் பொண்ணுக்கும் அவள் அம்மாவுக்குமே ரொம்பநாளா தொடர்பு உண்டாம், திடீர்னு அவனை கழற்றிவிட்டு, வேறு ஒரு பணக்காரனை பிடிக்க, அம்மாவும் மகளும் முயற்சி பண்ணியபோது, அவனுக்கு கோபம் வந்திடிச்சு, அதான் அவ முகத்திலே ஆசிட் வீசிட்டான், காரணமில்லாமலா அப்படி செய்வான்?......"
எழுலின் தாய் துயரம் தாங்கமுடியாமல், தற்கொலையில் தன் வாழ்வை முடித்துக்கொண்டு, எழிலைப் பிரிந்தபோது, அவளால் மருத்துவ மனையில் கண் திறக்காமல், வாய் ஊமையாகி, படுத்திருந்த நிலையில், ஏதும் செய்யமுடியாமல் துடித்தாள்.
அவள் தாயை அனாதைப் பிணமாக, அரசு கருணை கொண்டு, காசு வாங்காமல் எரித்து சாம்பலாக்கியது!
அது மட்டுமா? இந்த சமுதாயம் அவளுக்கு இத்தனை துன்பங்களையும் தந்து அழித்துவிட்டு, அந்த காமுகனை ஒன்றுமே தண்டிக்காமல், விடுவித்துவிட்டது.
எப்படி? அவள் கண் திறந்து, வாய் திறந்து, நடந்ததை நினைவில் கொண்டுவந்து, காவல்துறையின் விசாரணைக்கு பதில் சொல்வதற்குள், அந்தக் காமுகன் எங்கேயோ தலைமறைவானான்!
அவளுக்கு ஆதரவு தர சமூகத்தில் யாருமில்லை!
ஊமை கனா கண்டதுபோல, தனக்கு நடந்த கொடூரத்தை பகிர்ந்துகொள்ள எவருமின்றி தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டாள்.