ஊர்மேல் கவிந்தது. மூன்று நாட்களும் அம்மாவால் ஒரு வாய்கூட உண்ண முடியவில்லை. ஒரே விக்கல்!
நாலாவது இரவு வேகமாக வந்தது.
ஓ! இந்த இரவுகள் மிகவும் கொடியன.
அம்மா திண்ணைக் குந்தில் கால்நீட்டி உட்கார்ந்திருந்தாள். மரஇலைகள் நடுநடுங்கிக் கொண்டிருக்க, காற்று அவற்றைச் சீண்டிவிட்டுப் போய்க் கொண்டிருந்தது. நிலவு மேகங்களுக்குள் பயந்து போய் ஒளித்துக்கொண்டு அடிக்கொருதரம் எட்டிப்பார்த்து, 'சடக்' எனத் தலையை உள்ளிழுத்துக் கொண்டிருந்தது. ஒழுங்கையில் யாரோ சுருட்டுப் பிடித்துக்கொண்டு போனான் போலும். 'கும்'பென சுருட்டின் நாற்றம் வீசிற்று. நாய் சுருண்டுபோய் அம்மா பக்கத்தில் படுத்திருந்தது.
வாகனம் ஒன்று வருவதை அம்மா உணர்ந்தாள். அளவான வேகம். கண்களைக் கூசச் செய்யும் ஒளி வெள்ளத்தை உமிழ்ந்த படி வாசலில் நின்றது. 'ஹோர்ன்' ஐ ஒலித்து, வந்துவிட்டதாகச் சேதி சொல்லிற்று.
அம்மா ஆசுவாசப் பெருமூச்சு விட்டாள்.
கடவுளுக்கு நன்றி! குலம் இன்று வீட்டுக்கு வந்திருக்கிறான்!
கதவுகளைத் திறந்து அறையுஞ் சத்தம். குலம் மட்டுமல்ல வேறும் சிலர் வந்திருக்கவேண்டும். குசுகுசுவெனக் கதைக்கின்ற சத்தம். படலையை மெல்லத் தள்ளித் திறந்தனர். கூட்டமாக வந்தனர்.
யாரோ ஒருவனைக் கைத் தாங்களில் கூட்டிக்கொண்டு வந்தனர். அம்மா பயந்தவளாய் விருட்டென எழுந்தாள். விளக்கை தூக்கி உயரப்பிடித்தாள்.
குலம் சோர்ந்துபோய் வந்துகொண்டிருந்தான். அவனைத் தாங்கி அழைத்து வருகின்றனர். வலது கையை ஒருவன் மென்மையாகப் பற்றியபடி வந்தான் மணிக்கட்டுக்குக் கீழே இரத்தம்