“சரவணன் சார் கூட முதல்ல என்னை கவனிக்கலையாம். அவ தான், “அப்பா இவங்க ரஞ்சி மிஸ் மாதிரி தெரியுதுன்னு”, என்னை அடையாளம் கண்டுபிடிச்சு சொல்லியிருக்கா! புத்திசாலி பொண்ணு!”
என்று சான்றிதழ் கொடுத்தவர் மேலும்,
“அவளுக்கு நான் தான் ஃபேவரைட் டீச்சராம். உங்களை மறக்கவே முடியாதுன்னு சொன்னாடா”,
என்று பெருமிதமாக சொன்ன அன்னையை பார்த்து..
“அப்பவே முடிவு பண்ணிட்டீங்களாக்கும் உங்க மருமகளாக்க!”, விளையாட்டாக கேட்டான் கண்களில் குறும்புடன்.
“நாம ஆசைபட்டா பத்தாதே! அவங்களுக்கும் விருப்பம் இருக்கணும்ல. ரொம்ப வருஷம் கழிச்சு சரவணன் சாரை பார்க்கிறேன். எடுத்த எடுப்பிலே பொண்ணு கேட்கவான்னு அடக்கி வாசிக்க வேண்டியதாகி போச்சு”, என்று அவர் சொல்லவும்..
நினைவலைகளை தோண்டி பார்த்தான்.. சரவணன் சாரின் முறுக்கு மீசையைத் தாண்டி, அவர் குடும்பம் பற்றிய எதுவும் அவன் நினைவில் இல்லை..
அது மார்ச் மாதம். வங்கி கணக்கு முடிக்கும் காலம் அது என்பதால், இவனுக்கு வேலைப் பளு அதிகமாக இருந்தது. வார இறுதி நாட்கள் கூட வங்கிக்கு செல்ல வேண்டியிருந்தது.
தாயிடம் பேசக் கூட நேரமில்லாமல் ஓடியவனுக்கு மார்ச் மாதத்தை கடந்த பின் தான் ஓய்வு கிடைத்தது. அந்த சனிக்கிழமை மாலை தொலைக்காட்சியை பார்த்து பொழுதை கழித்துக் கொண்டிருந்தவனிடம் ரஞ்சிதம்,
“கண்ணா, லாண்டரிக்கு போடும் பொழுது உன் சட்டையில் ஒரு கார்ட் இருந்தது. உன்கிட்ட கொடுக்கவே மறந்துட்டேன்”, என்று அந்த அட்டையை எடுத்து கொடுக்க...
அப்பொழுது தான் அதை கொடுத்தவளையும், அவள் சொன்னதையும் நினைவு கூர்ந்தான். அந்த கார்ட்டில் இருந்த இணைய முகவரியை பார்த்து விவரங்களை திரட்டியவன், பின்,
வேக வேகமாக சட்டையை மாட்டிக் கொண்டு, அடுக்களையில் இருந்த ரஞ்சிதத்திடம்,
“அம்மா, இதோ வந்துடுறேன்”, என்று சொல்லி விட்டு வெளியே கிளம்பி சென்றான். வீட்டிற்கு திரும்ப இரவானது.
“இதோ வர்றேன்னு சொல்லிட்டு எங்கேடா போன? வர இவ்வளோ நேரம் ஆகிடுச்சு?”,
என்று கேட்க, அவரிடம் என்ன சொல்வதென்று முதலில் திகைத்தவன் பின்,
“ஃப்ரண்ட் வீடு மாத்துறான். ஹெல்ப் கேட்டான்! அது கொஞ்சம் லேட்டாகிடுச்சு!”, என்று சமாளித்தவன், மேலும் அவர் அதைப் பற்றி பேச விடாது
“பசிக்குதும்மா சாப்பாடு வைங்களேன்!”, என்று அவரை திசை திருப்பினான்.
அடுத்த நாள் ஞாயிற்று கிழமை. சற்று சாவகாசமாக எழுந்து கொள்ளலாம் என்று போர்வையை இழுத்து மூடி தூங்கிக் கொண்டிருந்தவனை நினைக்க.. ரஞ்சிதமோ அவனை அவசர அவசரமாக எழுப்பினார்.
“எழுந்திரிடா.. இன்னைக்கு உனக்கு பொண்ணு பார்க்க போறோம்”, என்று சொல்ல... திடுக்கிட்டு எழுந்தவன்,
“என்னம்மா... திடுதிப்புன்னு சொல்றீங்க?”, என்று கேட்டதும்,
“நம்ம சரவணன் சார் பொண்ணை தான் பார்க்க போறோம். கோயில்ல சந்திச்சுகிட்ட பிறகு ஒரு மாசமா பேச்சு வார்த்தை போயிட்டு தான்டா இருக்கு! பேர் பொருத்தம், ஜாதகம் எல்லாம் ஒத்து வந்த பிறகு உன்கிட்ட சொல்லலாம்ன்னு இருந்தேன்!”, என்று அவர் சொன்னதும்,
இவன்,
“அந்த இளவரசியை மறந்து இருப்பீங்கன்னு நினைச்சேன்! இந்த அளவிற்கு போயிட்டீங்க..”
“டேய்... அந்த பொண்ணு பேரை ஒரு தடவை தானே சொன்னேன். நீ இந்த அளவுக்கு நியாபகம் வச்சிருக்கே!”, இப்பொழுது அவன் அம்மா அவன் வழியிலே மடக்க....
“பொண்ணு பேருன்னா அப்படி தான்ம்மீ!!!”, என்று வழிந்த சின்ன கண்ணன்,
“பேரு என்னவோ நல்லா தான் இருக்கு! பொண்ணு போட்டோவை காட்டுங்க! பார்த்துட்டு டிசைட் பண்றேன்!”, என்று சொல்லிக் கொண்டே சோம்பல் முறிக்க...
“அவங்க வீட்டில் போட்டோ கொடுக்கிற பழக்கம் இல்லையாம். அது அவசியமே இல்லை. நான் தான் பார்த்தேன்ல சூப்பர் பொண்ணுடா! உனக்கு கண்டிப்பா பிடிக்கும்! சீக்கிரம் கிளம்பு! நேரமில்லை”, என்று அவனை கிளப்புவதிலே குறியாக இருக்க..
“பொண்ணு ஃபோட்டோ கூட பார்க்காம.. எப்படிம்மீ?”, என்று புலம்பினாலும் அவர் பேச்சை தட்ட முடியாமல் கிளம்பி வந்தான்.
உயர்ந்த பதவியில் இருந்தாலும், பைக் தான் அவனுக்கு இஷ்ட வாகனம். பைக்கில் ரஞ்சிதத்தை ஏற்றிக் கொண்டு கிளம்பியவனுக்கு சரவணன் வீட்டை நெருங்க நெருங்க உள்ளுக்குள் பயம்...
“அம்மா, அந்த பொண்ணை பிடிச்சிருக்குன்னு நானே வாயைத் திறந்து சொன்னா மட்டும் தான் கல்யாண பேச்சை எடுக்கணும்! சும்மா ஃபோர்ஸ் பண்ணக் கூடாது. சரியா?”, கட்டளையிட்டான் அன்னையிடம்.
அந்த வீட்டிற்குள் சென்றதும், சரவணன் வரவேற்றார். அவர் முறுக்கு மீசை காணாமல் போயிருந்தது. மறக்காமல் விசாரித்தான் அதை. என் பொண்ணுக்கு பிடிக்கலைப்பா என்று அவர் சொன்ன பொழுது..