மந்திரித்து விட்ட சேவல் போல அவள் கட்டளைக்கு அடி பணிந்தவனாய் கொட்டை எழுத்துக்களில் பொறித்த அந்த ஆங்கில வாசகத்தை கவனித்தான்..
“Like? Then Share!
அதைக் கண்டவனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை... அவள் விழி கலந்து புன்னகைத்தான்.. அவள் முகத்திலோ வெட்கக் கலை! பார்வையை தாழ்த்தியவளை தனதாக்கி கொள்ள துடித்த மனதை கட்டுபடுத்த தவித்தான்.
அத்தனை பேர் பார்வையும் இவர்கள் மீதிருக்க... இவர்கள் சமிக்சை மொழிகள் மற்றவர்களுக்கு தெரியவில்லை. அதற்கு மேலும் அவன் பார்வையை எதிர் கொள்ள முடியாதவளாய் அந்த அறையை விட்டு சென்று விட்டாள்.
இளவரசி அவன் கண்ணில் இருந்து மறையும் வரை... வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவனிடம்,
“என்னடா ரொம்ப யோசிக்கிற.. பொண்ணு பிடிக்கலைன்னு சொல்லிடவா?”, என்று காதுக்குள் கிசு கிசுக்க....
“அம்மா!!!!”, அதிர்ச்சியில் இவன் குரல் உயர அன்னையைப் பார்க்க.. மற்றவர்கள் திகைத்து இவனைப் பார்த்தனர்.
சூழ்நிலையை சமாளிக்க ரஞ்சிதம் சிரித்த படியே,
“இளவரசியை ரொம்ப பிடிச்சிருக்குங்க எங்களுக்கு!”, என்று அனைவருக்கும் பொதுவாக அறிவித்து விட... பெரியவர்கள் திருமண பேச்சு வார்த்தையை ஆரம்பித்தனர்.
எல்லாம் பேசி முடிந்து கிளம்பும் பொழுது கூட, அவள் அவர்கள் கண் முன் வரவில்லை.
“கொஞ்சம் ஷை யா ஃபீல் பண்றா, தப்பா நினைக்காதீங்க!”, அவள் சகோதரி ரஞ்சிதத்திடம் சொல்வது இவன் காதிலும் விழுந்தது.
‘நம்பிட்டேன்’, என்று நினைத்த படி அனைவரிடமும் விடை பெற்று வெளியே வந்து பைக்கை ஸ்டார்ட் செய்தவனுக்கு..
அவளை மீண்டும் பார்க்க மாட்டோமா என்ற ஏக்கம்... வீட்டை மீண்டும் ஒரு முறை திரும்பி பார்த்தான்.
மொட்டை மாடி குட்டிச் சுவரில் அமர்ந்து அவனையே பார்த்த படி டீயை பருகிக் கொண்டிருந்தாள் அவன் உள்ளம் கவர்ந்தவள்!
அவள் கொடுத்த டீ கோப்பையின் வாசகத்தை புரிந்து கொண்டவனாய்.. அவளுக்கு என்று விட்டு வைத்த மீதியை பருகிக் கொண்டிருக்கிறாள் என்பதை அறியாதவனா அவன்!
‘உன் வாழ்க்கையில் கலந்து விட்டேன்’, என்பதை சொல்லாமல் சொல்கிறாள். கண்களில் கண்ட காட்சி... இவன் இதயத்திற்குள் இறங்க.. பங்கு போட வந்தவளிடம் தன்னை முழுமையாக பறி கொடுத்து நின்றான் அந்த நிமிடத்தில் இருந்து.
அன்றிலிருந்து இன்று வரை.. எத்தனை தூங்க இரவுகள்.. கனவுகளிலும்.. காதல் வசனங்களிலும்.. கழித்திருப்பான். எல்லாம் அலைபேசியில் தான். அவளை எப்பொழுது பார்ப்போம் என்று இவன் தவிக்க அவளோ,
“உங்க பார்வையை ஃபேஸ் பண்ணவே முடியலை சின்னா”, என்று மறுத்து விட்டாள்.
அதை நினைத்தவனுக்கு இன்று....
‘ஒருவேளை நான் உன்னை ரசிக்கிறது பிடிக்காம அப்படி சொன்னியோ? அப்போ உருகி உருகி போன்ல பேசினது என்னவாம்!!!”
உள்ளுக்குள் பொருமியவன், அவள் பேசிய பேச்சுக்களை அசை போட்டான்..
அவளை பெண் பார்த்து வந்த அன்று இரவே... அவளுடன் பேசிய பேச்சுக்களை நினைவு கூர்ந்தான்..
“அதென்ன ஆம்பிளைங்க மட்டும் பொண்ணு பார்க்க வர்றது? நாங்க பையனை பார்க்க வேண்டாமா? அதான் ஆபிஸ்க்கு வந்தேன்! உங்களை பார்க்க வர்றதுக்கு முன்னாடியே உங்களை மேரேஜ் பண்ணனும் 90% உறுதியா இருந்தேன்! என் ரஞ்சி மிஸ்க்காக.. மீதம் பத்து பர்சென்ட் தான் உங்களுக்காக!”,
“ஏன் ரஞ்சி மிஸ்க்காகவா? அது இரண்டு விஷயத்துக்காக. ஒன்னு, பெர்சினாலிட்டி இஸ் இன் ஜெனிட்டிக்ஸ்ன்னு சொல்வாங்க. அதுக்காக!”
“இரண்டாவது நான் கணக்குல சில்லியா தப்பு விடுறப்போ ரஞ்சி மிஸ் சொல்லுவாங்க.. நீ மட்டும் என் பிள்ளையா இருந்தா தலையிலே கொட்டு வைப்பேன்னு.. அப்படி கொட்டி கொட்டி உங்க கேரக்டரை ஷேப் பண்ணியிருப்பாங்கன்னு ஒரு நம்பிக்கை!”
“கண்டிப்பையும், கனிவையும் காட்டுற ரஞ்சி மிஸ் பையன்னு ஃபர்ஸ்ட் மீட்லே ப்ரூவ் பண்ணிட்டீங்க சின்னா!”,
என்று இவன் அன்னையின் புகழை அவள் பாடிய பொழுது இன்னும் அதிகமாய் நேசிக்க ஆரம்பித்தான். அதை விட அவள்...
“கேன்சர்ல உங்கப்பா இறந்த பிறகு, கஷ்டபட்டு முன்னேறி இருக்கீங்கன்னு கேள்வி பட்டேன். நான் கேன்சர் மறுவாழ்வு மையத்துக்கு வாலண்டியரிங் போறப்போ, அதில் பாதிக்க பட்டவங்க, அவங்க குடும்ப எதிர்காலத்தை நினைச்சு வருத்த படுவாங்க.. “
“அவங்ககிட்ட உங்களை பத்தி சொன்னா, அவங்களுக்கு பாசிடிவ் ஃபீல் கிடைக்கும் தானே! அதான் உங்களை போகச் சொன்னேன்!”